பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. நன்றி மறக்கமாட்டேன்

கர்ணனுடைய மாளிகையில் அவன் தனியாக உலாவிக் கொண்டிருந்தான். இந்திரன் கிழவனைப் போல வந்ததும் கவச குண்டலங்களை வாங்கிக் கொண்டு போனதும் ஆகிய நினைவுகள் அவன் மனத்திரையில் நிழலெனப் படிந்து கொண்டிருந்தன. ஏதேதோ பலவகைப் பட்ட வேறு எண்ணங்களும் இடையிடையே மனத்தில் குமுறிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் சுற்றிலும் மிரள மிரளப் பார்த்துக் கொண்டே குந்தி அந்த மாளிகைக்குள் நுழைந்தாள். கர்ணன் அவள் உள்ளே வருவதைப் பார்த்து விட்டான். உடனே அவளுக்கு எதிரே வந்து “தாங்கள் தான் என்னைப் பெற்ற தாய் என்று சமீபத்தில் கண்ணனிடம் கேள்விப்பட்டேன். அது உண்மையாக இருக்குமானால் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கும் பாசமும் கடமையும் எனக்கு உண்டு” என்றான். குந்தி இதற்கு மறுமொழி கூறாமல் சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்தாள். பின்பு துணிவை வரவழைத்துக் கொண்டு எல்லா விவரங்களையும் கூறினாள். அவனைச் சிறு குழந்தையாகப் பெற்ற சிறிது போதிலேயே பெட்டியில் வைத்து விட்டது தொடங்கி யாவும் கூறினாள். கர்ணன் யாவற்றையும் உருக்கமாகக் கேட்டான். எல்லாம் நம்பக் கூடியவனவாகத்தான் இருந்தன. ஆனாலும் பாண்டவர்களுக்கு ஆதரவு தேடுவதற்காக மாயனான கண்ணனே குந்தியைக் கொண்டு இப்படி ஒரு, வஞ்சக நாடகத்தை நடிக்கச் செய்கின்றானோ?’ என்று கர்ணனுக்கு ஒரு சந்தேகமும் இருந்தது. குந்தியினிடம் நேருக்கு நேர் அந்தச் சந்தேகத்தையும் கேட்டு நிவர்த்தித்துக் கொள்ள அவன் ஆசைப்பட்டான். அதற்காக அவளுக்கு ஒரு கடுமையான சோதனையையும் ஏற்படுத்தினான்.

“அம்மா! நீங்கள்தான் என்னுடைய தாய் என்பது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் என்