பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

347

காகவும்தான் வீட்டுமன் அந்தத் தலைமையை ஏற்றுக் கொண்டான். உண்மையைச் சொல்லப் போனால் பாண்டவர்களுக்கு எதிராகப் படைத் தலைமை பூணும் ஆசையே அவனுக்கு இல்லை. இவ்வாறாக இரண்டு பக்கத்திலும் படை ஏற்பாடுகள் படைத்தலைமை ஏற்பாடுகள் எல்லாம் முடிந்தன.

அக்காலப் போர் முறைகளில் போர் தொடங்குவதற்கு முன் களப்பலி கொடுப்பது என்பதும் ஒன்று. இருசாராரில் எவராவது ஒருவர் நல்லவேளை பார்த்து மற்றொரு சாராரிடம், ‘இன்னாரைக் களப்பலியாகக் கொடுங்கள்’ என்று கேட்கிற முறைமையில் இது நடைபெறும். ‘களப்பலி’ என்பது போருக்கு ஆரம்ப நிகழ்ச்சி மட்டும் அல்ல. இதயத்தின் உறுதிக்கும் ஊக்கத்திற்கும் ஒரு பெரும் சோதனை. களப்பலி விஷயமாகத் துரியோதனன் வீட்டுமனைக் கலந்தாலோசித்தான். படைத்தலைவனான வீட்டுமன் கூறினான்:

“துரியோதனா! களப்பலி கொடுப்பதற்கு முன்னால் அதற்குரிய நல்லவேளையை முக்கியமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லவேளையை அறிந்து கூறுவதில் சகாதேவனைப் போல் வல்லவன் வேறெவனுமில்லை. அவன் நமக்குப் பகைவனேயானாலும் நீ போய்க் கேட்டால் நல்ல வேளையைக் கூறுவதற்கு அஞ்சவோ, மறுக்கவோ மாட்டான். அவனிடம் களப்பலி கொடுப்பதற்குரிய நல்லவேளையைக் கேட்டு அறிந்து கொண்டு அப்படியே அரவானிடம் போ. அரவானைச் சந்தித்து, “உன்னைக் களப்பலியாகக் கொடுப்பதற்கு நீ தயாராக இருக்கின்றாயா?” என்று கேள்! அரவான் பெருவீரன். அவனை உயிரோடு விட்டுவிட்டால் போரில் கௌரவர் படைகளைச் சூறையாடிச் சின்னபின்னம் செய்து விடுவான். எனவே அவனை முதலிலேயே களப்பலியாக வாங்கி விடுவது நமக்கு வெற்றியைக் கொடுக்கும். அரவான் தூய்மையும் மனவுறுதியும் மிக்க வீரன். ஆகையினால் நீ வேண்டுவதை