பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

377

வந்தார்கள். ஓடிப்போன கலிங்கன் திரும்பி வருதலைக் கண்டு வீட்டுமனோடு போரிடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு அவன் மேல் பாய்ந்தான் வீமன். கலிங்கர் படையை நிர்மூலமாக்கிய பின்பே மீண்டும் அவன் வீட்டுமனிடம் வந்தான். இப்போது அபிமன்னனும் அங்கு வந்து சேர்ந்து கொள்ளவே இருவருமாகச் சேர்ந்து வீட்டுமனை எதிர்த்தார்கள். வீட்டுமனுக்குப் பக்கபலமாக நிற்கும் பொருட்டுப் பல அரசர்களை ஒன்று திரட்டி அனுப்பினான் துரியோதனன். அவனால் அனுப்பப்பட்ட அரசர்கள் வந்து சேர்ந்தவுடன் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு வீமனையும் அபிமன்னனையும் வளைத்துக் கொண்டு விட்டார்கள். இதைப் பார்த்த அர்ச்சுனன் வீமனுக்கும், அபிமன்னனுக்கும் உதவுவதற்காக வில்லோடு வந்தான். அர்ச்சுனனின் திடீர் வரவு போரின் போக்கை எதிர்பாராத விதமாக மாற்றி அமைத்துவிட்டது. வீட்டுமனும் அவன் படைகளும் நிலை தடுமாறிச் சிதறிப் போகும்படி செய்துவிட்டான் அர்ச்சுனன். வீட்டுமனும் பிற கெளரவர்களும் தோற்று ஓடிய அளவில் இரண்டாம் நாள் போர் முடிந்து விட்டது. ‘இரண்டாம் நாள் போரில் அதிகமான ஆள் நஷ்டமும் தோல்வியும் தன் பக்கம்தான்’ என்று உணர்ந்தபோது துரியோதனனுக்கு வருத்தமாகவே இருந்தது. அந்த வருத்தத்தை மறுநாள் வெற்றியால் போக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணித் திருப்தியுற்றான் அவன். மூன்றாவது நாள் காலையில் போர் தொடங்கும்போது இருசாராருமே தத்தம் படைகளைப் புதுமாதிரி வியூகங்களில் அணிவகுத்து நிறுத்தினார்கள். கருடன் சிறகுகளை விரித்துக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் கெளரவ சேனைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. துட்டத்துய்ம்மன் கண்ணன் கூறிய ஆலோசனைப்படி பாண்டவ சேனையைப் பிறைச் சந்திரன் வடிவில் அணிவகுப்பு முடிந்ததும் முதல் நாள் விடுபட்ட இடத்திலிருந்து போர் தொடங்கியது. அர்ச்சுனனையும் அபிமன்னனையும் எதிர்த்து வீட்டுமன், துரோணர்