பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

393

போரில் துரியோதனனுக்குத் துணையாக வந்திருந்த பதினாயிரம் அரசர்களைத் தோற்கடித்தான்.

அர்ச்சுனனின் இந்தச் செயலினால் வீட்டுமனுக்கு ஆத்திரம் மூண்டது. அவன் தன் படைகளை அழைத்துக் கொண்டு திட்டத்துய்ம்மன், சிகண்டி ஆகிய பாஞ்சால தேசத்து வீரர்களுக்கு முன்னால் போய்ப் போருக்கு நின்றான். பாஞ்சாலத்து வீரர்கள் வீட்டுமன் கணையால் படாதபாடு பட்டனர். இதனால் சினமடைந்த சிகண்டி வீட்டுமன் மேல் வில்லை வளைத்துக் கொண்டு பாய்ந்தான். சரமாரியாக அவன் தன்மேல் பொழிந்த அம்புகளை எதிர்க்கத் தோன்றாமல் திகைத்துப் போய் நின்று விட்டான். மார்பிலும் உடலிலுமாக அம்புகள் தைத்தன. இந்த நிலையில் சிகண்டியை எதிர்ப்பதற்காக ஓடிவந்தான் துச்சாதனன். துச்சாதனனுக்கும் சிகண்டிக்கும் போர் நடந்தது. சிகண்டியின் வில்லை முறித்துத் தேரை அழித்துத் திகைக்கச் செய்தான் துச்சாதனன். சிகண்டி துச்சாதனனிடம் அகப்பட்டுக் கொண்டு விழிப்பதை அர்ச்சுனன் தொலைவிலிருந்து பார்த்துவிட்டான். அவன் உடனே சிகண்டிக்கு உதவியாக வந்து துச்சாதனனோடு போர் செய்து அவனைத் துரத்தினான், அர்ச்சுனன் துச்சாதனனைத் துரத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்த வீட்டுமன் அவனை எதிர்த்துத் தாக்குவதற்காக ஓடி வந்தான். வீட்டுமனை எதிர்ப்பதற்காக விராடராசனின் தம்பியும் மகாவீரனுமாகிய சதாநீகன் என்பவன் முந்துற்றான். ஆனால் சாமர்த்தியமாக சில கணைகளை ஏவிச் சதாநீகனை வந்த வேகத்திலே கொன்று தள்ளி விட்டான் வீட்டுமன். சதாநீகன் மரணத்தோடு ஒன்பதாம் நாள் போர் முடிந்தது.

பத்தாம் நாள் காலையில் போர் தொடங்குகிற போதே வீட்டுமன் மனக்குறளி அவனுக்குச் சொல்லி விட்டது. “உனக்கு இன்று மரணம்! உனக்கு இன்று மரணம்” என்று அவன் மனத்தில் எதோ இனம் புரியாத குரலொன்று கூவிக்கொண்டிருந்தது! போரைத் தொடங்குவதற்கு முன்பே