பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

அறத்தின் குரல்

மட்டும் முடியக்கூடாது, வீட்டுமனுடைய வாழ்வும் முடிந்து விட வேண்டும் நீ வீட்டுமனோடு போர் செய். மற்றதை நான் கவனித்துக் கொள்கிறேன்.”

“வீட்டுமரைக் கொல்வதா? ஐயையோ...” என்று அர்ச்சுனன் தயங்கினான்.

“பார்த்தாயா? உன்னிடம் இன்னும் ஆசாபாசங்கள் இருக்கின்றன. கடமை உணர்வு இல்லை.” இதைக் கேட்டதும் அர்ச்சுனன் அரைகுறை மனத்தோடு சம்மதத்திற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான். உடனே கண்ணன் அர்ச்சுனனுடைய தேரை வீட்டுமன் இருந்த இடத்திற்கு விரைவாகச் செலுத்தினான். வீட்டுமன் தேரும், அர்ச்சுனன் தேரும் எதிரெதிரே போருக்குத் தயாராக நின்றன. கண்ணன் சங்கநாதம் செய்தவுடன் போர் தொடங்கிற்று. திசையெட்டும் அதிரச் செய்த முழக்கத்தின் நடுவே ‘விர் விர்’ ரென்று அம்புகளும் வேல்களும் வாள்களும் பாய்ந்தன. போர்க்களம் முழுவதும் கிளர்ச்சியும் குமுறலுமாக விளங்கிற்று. இவ்வாறாக அர்ச்சுனனுக்கும் வீட்டுமனுக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்து கொண்டிருந்தபோது ‘சிகண்டி’ போர்க்களத்தில் புகுந்து வீட்டுமனுக்கு முன்னால் வந்து அவன் காணும்படி நின்றான். தான் முன்பு செய்திருந்த சப்தப்படி சிகண்டியை எதிரே கண்டவுடன் வீட்டுமன் போர் செய்வதை நிறுத்தி விட்டான். சிகண்டி வந்ததனால் வீட்டுமனிடம் ஏற்பட்ட திடீர் மாறுதலை அருகிலிருந்த துச்சாதனன் கவனித்து விட்டான், திடுமென்று வில்லை வளைத்துக் கொண்டு சிகண்டியின் மேல் பாய்ந்தான் துச்சாதனன். அதைக் கண்டு நடுங்கி வெலவெலத்துப் போன சிகண்டி உயிர் தப்பினால் போதுமென்று குதிகால் பிடரியில் பட ஓடத் தொடங்கினான். சிகண்டியின் உருவம் போர்க்களத்திலிருந்து மறைந்ததோ, இல்லையோ, வீட்டுமன் மீண்டும் அர்ச்சுனனோடு போர் செய்ய ஆரம்பித்தான். இம்முறை வீட்டுமன் செய்த போரில் ஆவேசம் மிகுந்திருந்தது. அவன் செலுத்திய அம்புகள்