பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

அறத்தின் குரல்

சயத்திரதனுக்குக் கட்டளை இட்டான் துரியோதனன். சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற அரிய கதாயுதம் ஒன்று சத்திரதனிடம் இருந்தது. அதை ஓங்கிக் கொண்டு அபிமன்னன் மேல் பாய்ந்தான் அவன். உடனே அபிமன்னனும் பக்கத்திலிருந்த வேறோர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சயத்திரதனை எதிர்த்தான். இருவர் கதாயுதங்களும் மோதின. எனினும் இடது கையால் கதாயுதம் பிடித்து எவ்வளவு நேரம்தான் போரிட முடியும்? அபிமன்னன் கைசோர்ந்து கதாயுதத்தைக் கீழே போட்டபோது சத்திரதனுடைய வலிமை வாய்ந்த கதாயுதம் அவன் தலையை நோக்கிப் பாய்ந்தது. அடுத்த விநாடி அபிமன்னன் பொறிகள் நிலைகலங்கிக் கீழே தரையில் சாய்ந்தான்.

5. வீரச்சிங்கம் வீழ்ந்தது!

வீழ்ந்த அபிமன்னன் மறுபடியும் எழுந்திருக்கவே இல்லை. அந்த வீரச்சிங்கத்தின் உடலில் உயிர் இருந்தால் அல்லவா மீண்டும் எழுந்திருக்க இயலும்? வீர சுவர்க்கம் அடைந்து விட்டான் அபிமன்னன். வீரத்தின் சிகரமாக அதுவரை அந்தப் போர்களத்தில் போராடிய ஒரு புனித ஆன்மா செயலிழந்து உணர்வொடுங்கித் தரையில் வீழ்ந்து விட்டது. பகைவர்களும் கூட மனம் கலங்கி வருந்திக் கண்ணீர் சிந்துமாறு செய்தது அவன் முடிவு. துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகியவர்கள் மட்டும் மனம் வருந்தவில்லை. தன் மகனை இழந்த வருத்தம் கூடத் துரியோதனனுக்கு அப்போது மறந்துவிட்டது. அர்ச்சுனன் மகனான அபிமன்னன் இறந்துவிட்டான் என்ற களிப்பே அவன் மனத்தில் நிறைந்து நின்றது. இவர்கள் நான்கு பேரைத் தவிரப் பரந்து விரிந்த அந்தக் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அபிமன்னனுடைய மரணத்திற்காக வருந்தாதவர்கள் வேறெவருமில்லை. இதற்குள் அபிமன்னன் இறந்து விட்டான் என்ற இந்தக் கொடிய செய்தி தருமருக்கும் வீமனுக்கும்