பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

445


“கருடா! என்னையும் அர்ச்சுனனையும் விரைவாகச் சுமந்து கொண்டு சென்று கயிலையில் சேர்க்க வேண்டும்” என்றான் கண்ணன். கருடன் களிப்புடன் அதற்குச் சம்மதித்தான். கண்ணனைத் தனது தோள் மேலும் அர்ச்சுனனைக் கையின் மேலுமாக ஏற்றிக் கொண்டு கருடன் வாயு வேகம் மனோவேகமாகப் பறந்தான். அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக விரைவிலேயே கருடன் அவர்களைத் திருக்கயிலாயத்தில் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டான். வெள்ளிப் பனி மலையின் நெடிதுயர்ந்த சிகரத்தில் ஜோதிப் பிழம்பாக வீற்றிருந்த சிவபெருமானைக் கண்டு இருவரும் முகமும் அகமும் ஒருங்கு மலர வணங்கினார்கள். சிவபெருமான் புன்னகை பூத்த முகமண்டலத்துடன் அர்ச்சுனனை ஆசி கூறி வரவேற்றார். அப்போது அங்கே, அந்தப் பெருமானிடம் அவனுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. வருகிற வழியில் ஒரு தோட்டத்தில் கண்ணனையே சிவபெருமானாக எண்ணிக் கொண்டு அர்ச்சுனன் சிவபூஜை செய்தானல்லவா? அப்போது அவன் என்னென்ன மலர்களைக் கண்ணன் மேல் அர்ச்சித்திருந்தானோ அதே மலர்கள் சிவபெருமானின் திருவடிகளில் இலங்கின. “ஆகா! ‘நானும் சிவபெருமானும் ஒரே அம்சத்தின் இருவேறு பகுதிகள்’ என்று கண்ணன் கூறியது எவ்வளவு பெரிய உண்மை?” என்று அர்ச்சுனன் வியந்து கொண்டே கண்ணன் நின்ற பக்கமாகத் திரும்பினான். கண்ணனுடைய உதடுகளில் குறும்புத்தனமான சிரிப்பு நெளிந்து விளையாடிக் கொண்டிருந்தது. பின்பு அர்ச்சுனன் மனம், மொழி, மெய் மூன்றையும் ஒரு முகப்படுத்தித் திரிகரணசுத்தியோடு சிவபெருமானைப் புகழ்ந்து போற்றித் தியானித்தான்.

அர்ச்சுனனுடைய தியானத்துக்கு மனம் இரங்கிய சிவபெருமான் கண்ணனையும் அவனையும் அன்போடு நோக்கி, “நீங்கள் என்னிடம் ஏதோ காரியமாக வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது ‘என்ன காரியமாக வந்துள்ளீர்கள்?’ என்பதைக் கூறினால் என்னாலானதைச் செய்வேன்” என்று கேட்டார்.