பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அறத்தின் குரல்


பாண்டவர்களும் குந்தியும் இவ்வாறு அத்தினாபுரியில் தங்கியிருந்தபோது குந்திபோச நாட்டுச் சூரமன்னனுக்குத் தன் மகளின் நாயகனாகிய பாண்டு இறந்து போன செய்தி எட்டியது. தன் மகளுக்கு நேர்ந்த இந்த அமங்கல நிகழ்ச்சிக்காகப் பெரிதும் கலங்கினான் அவன். அவனும் குந்திபோசர்களைச் சேர்ந்த ஏனையோரும் பேரர்களாகிய பாண்டவர்களுக்கும் குந்திக்கும் ஆறுதல் கூறுவதற்காக அத்தினாபுரிக்கு வந்து சேர்ந்தனர். யாதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறைமைக்காகப் பலராமனும் கண்ணனும் கூட வந்து தங்கி ஆறுதலுரைத்தனர். தந்தையை இழந்து கவலையில் ஆழ்ந்து போயிருந்த பாண்டவர்கள் ஐவரும் இவர்கள் வரவால் பெரிதும் மனந்தேறினார்கள்.

பாண்டவர்கள் பெற வேண்டிய செல்வம், ஆட்சியுரிமை முதலியவற்றையும் அவர்களுக்கு முறைப்படி பகுத்தளிப்பதற்குரிய முயற்சியைக் கண்ணன், பலராமன், குந்தி போசகர்கள் முதலிய இவர்கள் மேற்கொண்டனர். தண்ணீர்ப் பெருக்கோடு தண்ணீர்ப் பெருக்கு ஒன்று பட்டுக் கலந்தது போல இவர்கள் யாவரும் ஒன்று பட்டு அத்தினபுரியில் உவந்திருந்த நிலை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீட்டுமன், விதுரன் முதலிய பெரியோர்களுக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றுப் போற்றிப் பேணுவதிலேயே நேரமெல்லாம் கழிந்தது. பாண்டவர்க்கு வாழ்நாள் முழுவதும் கண்ணபிரானுடைய அனுதாபமும் உதவிகளும் கிடைப்பதற்கு இந்த முதல் சந்திப்புப் பெரிதும் பயன்பட்டது. சில நாட்கள் தங்கியிருந்த பின்னர் குந்தி போசர்களும், கண்ணன், பலராமன் முதலியவர்களும் புறப்பட்டு விடை பெற்றுக் கொண்டு தத்தம் நாடு சென்றனர். கருடனுக்கு அஞ்சித் தளரும் பாம்புகள் போலப் பாண்டவர்களை நோக்கத் துரியோதனாதியர் தளர்ந்தவர்களாகத் தென்பட்டனர். பாண்டவர். கல்வியாலும் வீரத்தாலும் நாள்தோறும் சிறப்புற்று வாழத் தலைப்பட்டனர். அவர்கட்கு முன் கெளரவர், மதிக்கு முன் மின்மினி யாயினர்.