பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

459


“துரோணரே! அர்ச்சுனனை இவ்வளவு தூரம் முன்னேற விட்டீர்களே? நமது படைகளெல்லாம் எங்கே போயின? சத்திரதனை அர்ச்சுனன் கொன்றுவிட்டால் என் தங்கையின் கதி என்ன ஆவது? நேற்றிரவு நம்முடைய பாசறையில் கடோற்கசனுக்கு முன் அர்ச்சுனனைக் கொல்வதாகச் சபதம் செய்தவர்கள் எல்லோரும் எங்கே ஓடிப் போனார்கள்? அர்ச்சுனனுடன் நேருக்கு நேர் நின்று போர் செய்ய அவர்களுக்கெல்லாம் பயந்தோன்றிவிட்டதா? அவர்கள் எல்லோரும் வெறும் வாய்ப் பேச்சில்தான் வீரர்கள் போலிருக்கிறது. இதிலிருந்து எனக்கு என்ன எண்ணம் உண்டாகிறது தெரியுமா? உண்மையாகப் பார்க்கப் போனால் அர்ச்சுனனோடு எதிர்த்துப் போர் செய்யக்கூடிய அவ்வளவு ஆற்றல் படைத்தவர் ஒருவர்கூட நமது பெரும் படையில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இனி வேறு வழியும் இல்லை. நான் மற்றவர்களை நம்பிப் பயனும் இல்லை. நானே போர்க்களத்தில் இறங்கி அர்ச்சுனனோடு நேருக்கு நேர் போர் செய்ய வேண்டியதுதான்.” துரியோதனனுடைய ஆத்திரத்தைக்கண்டு துரோணருக்குச் சிரிப்புத்தான் வந்தது. சந்தர்ப்பத்தை உத்தேசித்து அந்தச் சிரிப்பு வெளிப்பட்டு விடாமல் அடக்கிக் கொண்டார் துரோணர்.

“துரியோதனா! படைவீரர்கள் அர்ச்சுனனை எதிர்க்கவில்லை என்று நீ என்னிடம் வந்து ஆத்திரப்படுகிறாய். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அர்ச்சுனனும் கண்ணனும் வெற்றியோடு முன்னேறுகிறார்களே என்று நாம் அவர்கள் மேல் பொறாமைப்பட்டு என்ன பயன்? அவர்களுடைய சக்தி பெரிது. மேலும் அர்ச்சுனன் சிவபெருமானைச் சென்று வணங்கி உயரிய அஸ்திரங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றான். ஈரேழு பதினான்கு புவனங்களையும் படைத்த பிரம்மாவே முன் வந்தாலும் அர்ச்சுனனை வெற்றி கொள்வது முடியாத காரியம் ஆயிற்றே? அவ்வாறு இருக்க நாம் வெல்லுவதாக நினைக்கவும் முடியுமா? தவிரவும் கண்ணன் வேறு