பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. துரோணர் முடிவு

துரோணருக்கும் குந்தி போஜராஜனுக்கும் போர் நிகழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில் களத்தின் மற்றொரு பகுதியில் சல்லியனுக்கும் நகுவனுக்கும், மாளவராசனுக்கும் வீமனுக்கும் சாத்தகிக்கும் கர்ணனுக்கும், சகுனிக்கும் பாண்டியனுக்கும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு போரிலும் வெற்றியும், தோல்வியும் யார், யார், பக்கம் ஏற்படும் என்று கண்டுபிடிக்க இயலாமல் கடுமை எதிர்ப்பு இருபுறமும் நிறைந்திருந்தது. இருபுறத்துப் படைகளிலும் பொறுக்கியெடுத்து நிறுத்தி வைத்தாற்போல் வீரர்களே நிறைந்திருந்தனர். ஆயுதங்களைப் பிரயோகம் செய்வதில் வல்லவர்களாகிய இருசாராரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் யுத்தம் செய்து கொண்டிருந்தனர். கடந்த பதினான்கு நாட்களாக இல்லாத கோபம் அன்று துரோணருக்கு ஏற்பட்டிருந்தது. அவர் முகத்தில் அவ்வளவு ஆத்திரத்தின் நிழல் படிந்ததை அதற்கு முன்பு யாரும் கண்டதே இல்லை. என் எதிரிகளின் வாழ்வை நான் முடிக்க வேண்டும், அல்லது என் வாழ்வை நான் முடிக்க வேண்டும் அல்லது என் வாழ்வை என் எதிரிகள் முடிக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு போருக்கு வந்ததைப் போல இருந்தது அவருடைய தோற்றம். பிரம்ம தேஜஸும் ஒழுக்கமும், கருணையும், தவழும் அந்த முகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் கூடத் திடுக்கிட்டனர். திடீரென்று போர்க் களத்தில் துரோணருடைய தேருக்கு முன்னால் மரீசி முனிவர், அகத்திய முனிவர் முதலிய பெருந்தவச் செல்வர்கள் தோன்றினர். எதிர்பாராத நிலையில், எதிர்பாராத விதத்தில் அவர்கள் வரவு கண்ட துரோணர் ஸ்தம்பித்துப் போய்விட்டார். உடனே வில்லை மடக்கி வைத்துக் கொண்டு போரை நிறுத்திவிட்டு அவர்களை வணங்கி வரவேற்றார்.