பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

523


“கர்ணா! நான் கேட்டதை நீ மறுக்காமல் கொடுத்து விட்டாய். இனி நீ உனக்கு வேண்டிய வரம் ஒன்றை மறுக்காமல் என்னிடம் கேள். நான் கொடுக்கிறேன்.”

“எனக்கு வேண்டிய வரமா? வேறென்ன வேண்டும்? இன்னும் எத்தனை ஜன்மங்களில் நான் பிறந்தாலும் இல்லையென்று வருந்தி என்னிடம் வருபவர்களுக்கு நான் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து உதவும் நல்ல மனத்தை எனக்கு அளித்தருளுங்கள். அதுதான் நான் உம்மிடம் கேட்கும் ஒரே ஒரு வரம்!”

“அப்படியே ஆகட்டும்! நீ எவ்வளவு பிறவி பெற்றாலும் ஒவ்வொரு பிறவியிலும் மாபெரும் செல்வத்தையும் கொடைக் குணத்தையும் பெற்று வாழ்வாயாக! பின்பு கிடைப்பதற்கரிய மோட்ச பதவியும் உனக்குக் கிடைக்கும்!”

இறுதியில் விடை பெற்றுக் கொண்டு செல்வதற்கு முன் அந்த மாய வேதியன், “கர்ணா! இதோ நன்றாக என்னைப் பார். ஒரே ஒரு விநாடி உண்மையில் நான் யார் என்பதை உற்றுப் பார்” என்று கூறிக்கொண்டே சங்கு சக்ரதாரியாக தேஜோமயமான காட்சி கொடுத்தான். கர்ணன் விழிகள் வியப்பால் மலரச் சிரமேல் கைகளைக் கூப்பி வணங்கினான். தன் முன் சாஷாத் நாராயணனாகிய மகாவிஷ்ணு நின்றுகொண்டிருப்பதைக் கண்டதும் அவனுக்கு ஏற்பட்ட பரவசமும் மகிழ்ச்சியும் இவ்வளவு அவ்வளவென்று சொல்லி முடியாது. சிறிது நேரத்தில் கண்ணன் மீண்டும் தன்னுடைய பழைய வேதிய உருவை மேற்கொண்டு வந்த வழியே திரும்பி அர்ச்சுனன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

அர்ச்சுனன் அருகே சென்றதும் சுயவுருவில் தேர் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, “அர்ச்சுனா! உன்னிடமுள்ள அஞ்சரீகம் என்னும் அஸ்திரத்தை எடுத்து கர்ணன் மேல் செலுத்து. இம்முறை அது அவனுடைய உயிரை வாங்கிவிடும்” என்றான். அவ்வாறே அர்ச்சுனன் அஞ்சரீகக் கணையை எடுத்து வில்லிலே வைத்துக் கர்ணன் மேல்