பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

540

அறத்தின் குரல்


அடுக்கடுக்காகத் தோல்விகளையும், மரணங்களையுமே கண்ட அவன் மனம் கலக்கத்தின் சிகரத்தை அடைந்தது. “என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? முட்புதரில் கைகளை நுழைத்துவிட்டோம்! எடுப்பது எப்படி?’ - என்று தான் விளங்கவில்லை. ஐயோ! எதற்காக இந்தத் துர்ப்பாக்கியமான போரைத் தொடங்கினோம்?” - அழிவின் எல்லையில் தோல்வி அணு அணுவாகத் தன்னை நெருங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தபின் துரியோதனன் இப்படிச் சிந்தித்தான்.

முன்பு ஒரு முனிவர் தனக்கு உபதேசித்திருந்த மந்திரம் ஒன்று இப்போது அவனுக்கு நினைவில் வந்தது. அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்ப ஜபித்துத் தவம் செய்தால் போரில் இறந்து போனவர்களை எல்லாம் மீண்டும் உயிர் பெறச் செய்து பாண்டவர்களை எதிர்க்கலாமென்று எண்ணினான். உண்மையில் அந்த மந்திரம் வலிமை வாய்ந்ததுதான். பிரம்மாவிடம் கற்ற அந்த மந்திரத்தைச் சுக்கிராச்சாரி சகமுனிவனுக்குக் கூறினான். சகமுனி வியாழ பகவானுக்குக் கற்பித்திருந்தான். வியாழபகவானிடம் சீடனாயிருந்து அவன் கருணைக்குப் பாத்திரமான ஒருவன் மூலம் துரியோதனன் அதைக் கற்றுக்கொண்டிருந்தான்.

2. முடிவு நெருங்குகிறது

போர்க்களத்தில் நின்று அந்தத் தவத்தைத் செய்ய இயலாதென்று தோன்றியது. துரியோதனன் போர்க்களத்திலிருந்து ஓடினான். சிறிது தொலைவு சென்றதும் ஒரு குளமும் அதன் கரையில் பெரிய ஆலமரமாக வளர்ந்திருந்த இடம் வந்தது. குளத்தில் இறங்கி நீராடி ஆலமரத்தின் நிழல் படும்படியாகத் தண்ணீரிலேயே நின்றுகொண்டு அவன் தவத்தை ஆரம்பித்தான். தவத்தில் ஈடுபட்ட அவன் சுற்றுப்புறத்தைக் கவனிக்கவே இல்லை. மந்திரமும் தானுமாக இரண்டறக் கலந்து ஒன்றி விட்டான்.

இந்த நேரத்தில் அங்கே போர்க்களத்தில் அசுவத்தாமன் முதலியோர் துரியோதனனைக் காணாமல் திகைத்தனர்.