பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. பகைமை பிறக்கிறது

தன்னினும் இளம் பருவத்தினான அர்ச்சுனனின் திறமை அங்கே புகழ் பெற்று ஓங்குவதைக் கண்டு கர்ணன் மனங் கொதித்தான். ‘இவனுடைய ஆற்றலை எவ்வாறேனும் மங்கச் செய்து என் புகழை இங்கே நிலை நாட்டுவேன்’ - என்று எண்ணிக் கொண்டு அவையில் தன் கலைத்திறனைக் காட்டுவதற்குத் தயாராக எழுந்து நின்றான். சினத்தோடு பாய்ந்து எழுகின்ற சிங்கத்தைப் போலத் தன் குரலை முழக்கிக் கலைச் செயல்களைச் செய்து காட்டத் தொடங்கினான். அர்ச்சுனனுடைய திறமையை முற்றிலும் மங்கச் செய்து விட வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது. அவனை வம்புக்கு இழுத்தாவது மட்டந்தட்டி விட வேண்ட மென்ற எண்ணத்துடனே, “தனியாக உன் திறமையைக் காட்டினாய்! நீ உண்மையான திறமையும் வீரமும் உள்ளவன் ஆனால் என்னோடு இந்த அவையில் போர் செய். உன் தலையைக் கிள்ளி எறிந்து காட்டுகிறேன்!” - என்றான் கர்ணன்.

“போருக்கு அழைப்பது சரிதான் என்னோடு சரி நிகராக நின்று போர் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” - என்று அவனைத் தன் கேள்வியால் மடக்கினான் அர்ச்சுனன். இவர்களுடைய இந்தப் பகைமையும் மனக் கொதிப்பை வெளிக்காட்டுவன போன்ற சொற்களும் சுற்றியிருந்த வர்களை விளைவு என்ன ஆகுமோ?’ என்று அஞ்சும்படி செய்தன. இதற்குள் வயது முதிர்ந்தவரும் சிறந்த கலைகளின் ஆசிரியருமாகிய கிருபாச்சாரியார் எழுந்து அர்ச்சுனனின் கேள்வியைத் தழுவி ஆதரித்துப் பேசினார்.

“விசயன் கூறுவது ஒரு வகையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய செய்தி தானே? அரசகுமாரனாகிய அர்ச்சுனனுடன் எதிர்நின்று சமமாகக் கருதிப் போர் செய்வதற்குத் தேர்ப்பாக சூதநாயகனின் வளர்ப்பு மகனாகிய கர்ணனுக்கு என்ன தகுதி இருக்கிறது? கர்ணன் விசயனைப் போருக்கு அழைப்பதே