பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

79

வெளியேறுவதற்குச் சரியான சமயம் என்று தன் சகோதரர்களையும் தாயையும் சுரங்க வழியாக வெளியேற்றிக் கொண்டு வீமன் கிளம்பினான். பாண்டவர்களும் குந்தியும் பிழைத்தனர். புரோசனனும், வேட்டுவர்கள் ஐவரும் அவர்கள் தாயும் தீக்கிரையான மாளிகைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்க வழியாகவே வெகு தொலைவு நடந்து காட்டுக்குள் வந்து சேர்ந்தனர் பாண்டவர்களும் குந்தியும்.

ஆனால் உலகறியாத இரகசியம் இது! மறுநாள் பொழுது விடிந்ததும் இறந்து கருகிப்போன வேட்டுவர், வேட்டுவச்சி பிணங்களைப் பாண்டவர்களும் அவர்கள் தாயும் இறந்தவர் என்றெண்ணி வருந்தியது உலகம். விதுரன், வீட்டுமன் முதலியவர்கள் கூடப் ‘பாண்டவர்கள் அழிந்தனரோ’ -என்றெண்ணி வேதனை கொண்டனர். விதுரன் தச்சன் மூலமாக உதவி செய்திருந்தாலும் என்ன நடந்ததோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கத் தான் செய்தது. ஊரோடு தாங்களும் அழுது வருந்துபவர்களைப் போலத் துரியோதனாதியாரும் வருத்தப்பட்டுப் பொய்யாக நடித்தனர். ‘பாண்டவர்களை அறம் காக்கும்! அவர்கள் உறுதியாக இறந்திருக்க மாட்டார்கள்!’ -என்று வேறு சிலர் நம்பினர். விதுரன் மெய்யாகவே பாண்டவர்களைக் காக்க வழி கூறியிருந்ததனால் இந்த நம்பிக்கையால் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான். ஆனால் இந்தச் சம்பவத்தால் குலைந்து இடிந்து விழுந்த அரக்கு மாளிகை போலவே குருகுலத்தின் ஒற்றுமையும் ஒடுங்கிக் குலைந்து போய்விட்டது.


10. கானகத்தில் நிகழ்ந்தது

அரக்கு மாளிகையிலிருந்து வெளியேறிய வீமன், சகோதரர்களுடனும் தாயுடனும் ஒரு கானகத்தின் இடையே வந்து சேர்ந்திருந்தான். சுரங்க வழியின் முடிவு அந்த வனத்தில் தான் அவர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. தான் வைத்த நெருப்பு எங்கும் பற்றிப் பரவி மாளிகையில்