பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அறத்தின் குரல்

அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று கருதிச் சுயம்வர ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.

‘பாண்டவர்கள் அரக்கு மாளிகைத் தீ விபத்தில் இறந்து போனார்கள்’ -என்று பரவியிருந்த போலிச் செய்தியை எல்லோரையும் போல அவன் நம்பவில்லை. ‘அவர்கள் எவ்வாறேனும் அரக்கு மாளிகையிலிருந்து தப்பி உயிரோடு மறைவாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்’ -என்று அனுமானித்து, அந்த அனுமானத்தை உறுதியாக நம்பவும் நம்பினான். இந்த நம்பிக்கையினால் பாண்டவர்கள் எங்கிருந்தாலும் சுயம்வரச் செய்தியை அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றெண்ணி எங்கும் பரவச் செய்தான். ‘அர்ச்சுனனைத் தவிர வேறு எவரும் திரெளபதியை மணந்து கொள்ளக்கூடாது; மணந்து கொள்ள முடியவும் முடியாது!’ - என்ற நம்பிக்கை யாகசேன மன்னன் மனத்தில் தளராமல் இருந்தது. இங்கே பாஞ்சால நகரத்திலிருந்து தற்செயலாக வேத்திரயம் சென்றிருந்த பார்ப்பனன் ஒருவன் மூலம் பாண்டவர்கள் திரெளபதியின் சுயம்வர ஏற்பாட்டை அறிந்து கொண்டனர், அந்தணர்களாக உருமாறி வாழ்ந்து வந்த அவர்கள் தம் வேடத்திற்கேற்ப அவ்வூர் வேதியர்கள் சிலரோடு பாஞ்சால நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். திரெளபதியின் சுயம்வர நினைவே தேராக, ஆசை என்ற கடிவாளத்தை இட்டுத் தங்களைத் தாங்களே செலுத்திக் கொள்வது போல் அமைந்தது, அவர்களது பாஞ்சாலப் பயணம். மீண்டும் வியாச முனிவர் அவர்களைச் சந்தித்தார்.

“இரவு பகல் என்று பாராமல் பிரயாணம் செய்து விரைவில் பாஞ்சாலத்தை அடையுங்கள். சுயம்வரத்தில் உங்கள் பக்கம் வெற்றி ஏற்பட்டு, ‘நீங்கள் யார்?’ என்பதைத் தெரிவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் அச்சமின்றி ஆண்மையோடு நீங்கள் பாண்டவர்கள் என்பதை வெளிக் காட்டிக் கொள்ளுங்கள். இது தான் நான் உங்களுக்குக் கூற வேண்டிய செய்தி ஆசி! சென்று வாருங்கள். யாவும் நலமே நிகழும்” -என்றார் அவர்.