பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

அடுத்த நாள் காலையில் யாரோ ஒரு நண்பர் அந்த வீட்டுக்கு வந்தார். அவரைக் கண்டதும் அந்தச் நாய்க் குட்டி எருமைக் கன்றைப் போலச் சத்தம் செய்தது.

அவர் வீட்டுக்காரரைப் பார்த்து, “தூ, இந்த நாய்க்குட்டியை உடனே அடித்துத் துரத்துங்கள். “வீட்டுக்கு முன்னால் எருமை போலக் சத்துவது ஆகவே ஆகாது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நாய்க்குட்டிக்கு நல்ல அடி கிடைத்தது. அது அங்கிருந்து ‘தப்பினோம் பிழைத்தோம்’ என்று குளக் கரைக்கு வேகமாக வந்து சேர்ந்தது.

அந்தச் சமயத்தில் வாத்துக்குஞ்சு “குவாக் குவாக்” என்று கத்திக்கொண்டு அதனிடம் வந்தது. இந்தப் பேச்சுத்தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நாய்க் குட்டி அதைக் கற்றுக்கொண்டது.

உடனே மிகுந்த உற்சாகத்தோடு மற்றொரு பெரிய வீட்டில் நுழைந்து, வாலைக் குழைத்துக்கொண்டு நின்றது.

அந்த வீட்டிலிருந்து ஒரு சிறுவன் வெளியே வந்தான். அவன் நாய்க்குட்டியின் அழகில் மயங்கிப்போய், “அப்பா, இதை நம் வீட்டில் வைத்து வளர்க்கலாம்” என்று அப்பாவிடம் ஆசையோடு கேட்டான். அவரும் சம்மதித்தார்.

சிறுவனுக்கு ஒரே மகிழ்ச்சி. அவன் அதற்குப் பிஸ்கோத்தும் மிட்டாயும் கொடுத்தான். அவற்றைத் தின்றுவிட்டு நாய்க்குட்டி ‘குவாக் குவாக்’ என்று மகிழ்ச்சியால் சத்தமிட்டது. சிறுவன் அந்தச் சத்தத்தைக் கேட்டு மேலும் குதூகலமடைந்தான். “இந்த நாய்க் குட்டி புதிய பாஷை பேசுகிறது” என்று துள்ளிக் குதித்தான்.

தெருவழியே போய்க்கொண்டிருந்த திருடன் ஒருவன் இவற்றையெல்லாம் நன்றாகக் கவனித்துக் கொண்டான், அவனுக்கு உள்ளுக்குள்ளே ஒரே சிரிப்பு.

இரவில் எல்லாரும் படுத்துத் தூங்கும்போது திருடன் மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தான். நாய்க்குட்டி “குவாக் குவாக்” என்று சத்தமிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/30&oldid=1090601" இலிருந்து மீள்விக்கப்பட்டது