பக்கம்:மணி பல்லவம் 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

251

“சொப்பனபுரியாகவும், கந்தர்வ நகரமாகவும் இந்தப் பட்டினத்தை வருணனை செய்து பாடியிருக்கிற கவிகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், கதக்கண்ணா?”

“நினைப்பதற்கு என்ன இருக்கிறது? உள்ளவற்றில் நல்லவற்றைச் சிறப்பித்து மட்டும் பாடியிருக்கிறார்கள். அவர்கள் மரபும் அதுதானே?”

“மரபாக இருக்கலாம்! ஆனால் நியாயமாக இருக்க முடியாது. சோழ மன்னரும் அவருடைய அரண்மனையும் சுற்றியிருக்கும் எட்டிப்பட்டம் பெயர் செல்வர்களும் தான் காவிரிப்பூம் பட்டினம் என்றால் இந்தக் காவிரிப்பூம் பட்டினம் மிகவும் சிறியதாகக் குறுகிவிடும். செல்வமும் வீடும் தவிர வறுமையும் நோயும்தானே இங்கு மிகுதியாக இருக்கின்றன? அவற்றை ஏன் மறைக்கவேண்டும்?”

கதக்கண்ணன் இதற்கு மறுமொழி சொல்லி மேலே பேச்சைத் தொடர இடங்கொடுக்காமல் குதிரையில் தாவி ஏறினான். இளங்குமரனும் தன் குதிரையில் ஏறிக்கொண்டான். அவன் மனத்தில் பல வினாக்கள் ஏறிக் கொண்டு துளைத்தன. அவற்றுக்கு விடை கேட்கவும், விவாதம் செய்யவும் கதக்கண்ணன் ஏற்புடையவனாகத் தோன்றாததால் மனத்திலேயே அவற்றைச் சிந்தித்துக் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி அவனுக்குப் புலப்படவில்லை.

அவர்கள் காவிரியின் கழார்ப் பெருந்துறைக்குப் போகும் திருமஞ்சனப் பெருவழியில் நுழைந்தபோது நன்றாக விடிந்து ஒளி பரவத் தொடங்கியிருந்தது. முன்பு பூஞ்சிதறலாக இருந்த மழைத் தூற்றல் இப்போது சாரலாகப் பெய்து கொண்டிருந்தது. காவிரித்துறை நெருங்க நெருங்கச் சாலையில் கூட்டமும், தேரும், யானையும், குதிரையும் மிகுந்து நெருக்கமான போக்குவரவு இருந்ததனால் அவர்களால் தங்கள் குதிரைகளை விரைந்து செலுத்த முடியவில்லை. மெல்ல செலுத்திக் கொண்டு சென்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/252&oldid=1142067" இலிருந்து மீள்விக்கப்பட்டது