பக்கம்:மணி பல்லவம் 1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

மணிபல்லவம்

நாங்கூர் அடிகள் என்ன நோக்கத்தோடு இளங்குமரனை அழைத்திருக்கக்கூடும் என்பதையும் விளக்கிக் கூறினார். இளங்குமரனுக்கு அவற்றைக் கேட்டு மிகவும் பூரிப்பு உண்டாயிற்று.

“ஐயா! ஊழ்வினை என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எத்துணைத் தொடர்பாகக் கோவைப்படுத்துகிறது, பார்த்தீர்களா? இன்று காலையில் தான் தற்செயலாக நேர்ந்த ஓர் அநுபவத்தினால் எனக்கே ஞான நூல்களைக் கற்க வேண்டுமென்று தீராப் பசி எழுந்தது. உடனே யாரோ சொல்லி வைத்ததுபோல் நீங்கள் என்னைத் திருநாங்கூருக்கு அழைத்தீர்கள். எல்லாம் எவ்வளவு இயைபாகப் பொருந்தி வருகின்றன, பாருங்கள்!” என்று நன்றியோடு அவரிடம் கூறினான் இளங்குமரன்.

தான் இந்திரவிகாரத்துத் துறவியிடம் அவமானப்பட்டதையும் மறைக்காமல் அவரிடம் சொல்லிவிட்டான் அவன்.

“இதையெல்லாம் அவமானமாக நினைக்கலாகாது தம்பீ! நோயும், மூப்பும் மரணமுமாக உலகில் மனிதர்கள் நிரந்தரமாய் அடைந்து கொண்டிருக்கிற அவமான இருளில்தான் புத்த ஞாயிறு பிறந்து ஒளி பரப்பியது” என்று அவர் மறுமொழி கூறினார்.

அவர்களுடைய தேர் நாங்கூர் அடிகளின் பூம்பொழிலை அடைந்தபோது, தற்செயலாக நிற்பவர்போல் நாங்கூர் அடிகளே வாயிலில் வந்து நின்று கொண்டிருந்தார். ஆயிரம் கதிர் விரிக்கும் ஞாயிற்றொளி அலை கடற்கோடியில் மேலெழுவதுபோல் அமர்ந்திருந்த அடிகளின் முகத்தைப் பார்த்தபோது இளங்குமரனின் உள்ளத்தில் பணிவு குழைத்தது; அவன் அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். நீலநாக மறவரும் வணங்கினார். அடிகளின் கண்கள் இளங்குமரனையே பார்த்துக் கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/293&oldid=1142121" இலிருந்து மீள்விக்கப்பட்டது