பக்கம்:மணி பல்லவம் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

மணிபல்லவம்

“இப்போது இந்த இடத்தில் நான் உங்களைக் கொன்று போட்டால் என்னை ஏனென்று கேட்பாரில்லை...?”

வார்த்தைகளைத் தொடர்ந்து பேய்ச் சிரிப்பு ஒலித்தது. ஓங்கிய வாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாக நகர்ந்தது. பெருநிதிச் செல்வர் தாம் மோசம் போய்விட்டதை உணர்ந்தார்.

கடைசி விநாடி! அவருடைய உயிருக்கும் அந்த வாளின் கூர்மைக்கும் நடுவிலிருந்த காலத்தின் ஒரே ஓர் அற்ப அணு அது. அப்போது ஓர் அதிசயம் நடந்தது. நகைவேழம்பரின் ஓங்கிய கை தானாகவே தணிந்தது, வாளை இடுப்பிலிருந்த உறையிற் சொருகிக் கொண்டு இயல்பாக நகைத்தார் அவர்.

“இவ்வளவு பெரிய பயந்தாங்கொள்ளியாக இருக்கிறீர்களே? உங்களைச் சோதனை செய்து பார்த்தேன். உங்களிடம் சேர்ந்திருக்கும் செல்வம் உங்களுக்கு அளித்திருக்கிற தைரியத்தைத் தவிர, உங்களுடைய மனத்தில் உங்களுக்கென்று இயல்பிலே அமைந்திருக்கும் தைரியம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதற்காகவே இப்படிச் செய்தேன். பாவம்! நீங்கள் அநுதாபத்துக்குரியவர். பயப்படாதீர்கள், உங்களை ஒன்றும் செய்துவிட மாட்டேன். ஆனால் ஒன்றைமட்டும் நினைவில் நன்றாகப் பதித்துக் கொள்ளுங்கள். எப்போதாவது என்னுடைய உயிருடன் விளையாட ஆசைப்பட்டீர்களோ, தொலைந்தீர்கள். நான் நன்றியுள்ளவனாக இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டால் முதலில் நீங்கள் நன்றியுள்ளவராக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதை மறந்து செயல்படத் தொடங்கினால் முதலில் சாகிற உயிர் என்னுடையதாக இராது” என்றார் நகைவேழம்பர்.

எல்லாவற்றையும் கேட்டபடி பெருநிதிச் செல்வர் குனிந்த தலை நிமிராமல் இருளோடு இருளாக நின்றார். அவர் நின்ற நிலையே எதிரியிடம் மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/124&oldid=1149924" இலிருந்து மீள்விக்கப்பட்டது