பக்கம்:மணி பல்லவம் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

மணிபல்லவம்

அவளால் கப்பலில் சில நாழிகைகள்தான் அவனோடு பேசாமல் இருக்க முடிந்தது. சிரிப்பையும், முக மலர்ச்சியையும் செயற்கையாக மறைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், எப்போதும் அப்படி இருக்க முடியவில்லையே!

எவ்வளவு காலம் காத்திருந்தாலும் இளங்குமரனின் சுந்தரமணித் தோள்களுக்கு உரிமை கொண்டாடும் பெருமையைத் தானே அடைய வேண்டும் போல் அந்தக் கணத்தில் அவளுக்கு ஒரு தாகம் ஏற்பட்டது.

“எதிரே அவருடைய தேர் போயிற்றே. பார்த்தீர்களா, அம்மா?” என்று வசந்தமாலை சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“பார்த்தேன், அதற்கென்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது?” என்று அவளைக் கடிந்து கொள்வது போல் மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி.

சுரமஞ்சரி, வானவல்லி முதலியவர்கள் அமர்ந்திருந்த தேர் ஆலமுற்றத்துக் கோயிலுக்குச் செல்வதற்காகப் புறவீதியைக் கடந்து கொண்டிருந்தபோது, முல்லையும் வளநாடுடையாரும் தங்கள் இல்லத்திலிருந்து புறப்பட்டு எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்துக்குமுன் புறவீதி வழியாக இளங்குமரன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்ற செய்தியைத் தன் தந்தையிடம் கூறியிருந்தாள் முல்லை. தான் வீட்டு வாயிலில் நின்று கைநீட்டி அழைத்த அழைப்பையும் பொருட்படுத்தாமல் இளங்குமரன் தேரை விரைவாகச் செலுத்திக் கொண்டு போய் விட்டதைக் கண்டு முல்லை மனம் நொந்திருந்தாள்.

“அப்பா! நேற்று நீராட்டு விழாவில்தான் அவரைச் சந்திக்க முடியாமற் போயிற்று. யாரோ ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்காகக் காவிரியில் குதித்துச் சென்றாராம். அதன் பின்பு அவரை மீண்டும் தான் சந்திக்க முடியவில்லை என்று அண்ணன் வருத்தத்தோடு தேடிக் கொண்டு போயிருக்கிறார். அதைக் கேள்விப்பட்டதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/16&oldid=1149187" இலிருந்து மீள்விக்கப்பட்டது