பக்கம்:மணி பல்லவம் 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

319

‘இவர்கள் இரட்டைப் பிறவி என்பது அந்தக் கப்பல் தலைவனுக்குத் தெரியாது. ஐயோ பாவம்! போகிற போக்கில் ஏதோ பிதற்றிவிட்டுப் போகிறான் அவன். அவனுடைய கப்பலில் வந்தவர்கள் சுரமஞ்சரி தேவியும் அந்தப் பிள்ளையாண்டான் இளங்குமரனும்தான் என்பதைப் பற்றி உங்களுக்கு சிறிதும் சந்தேகமே வேண்டாம். இதோ உங்களுக்கு முன் சுரமஞ்சரி தேவியார் திகைத்துத் தலைகுனிந்து நிற்பதே இதற்குச் சான்றுகள்...” இவ்வாறு நகைவேழம்பர் கூறி விளக்கியபோது சுரமஞ்சரியின் தந்தை சீற்றத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் நாணி நடுங்கித் தலை தாழ்ந்து நின்றாள். தந்தையார் சுரமஞ்சரியைக் கோபித்துக் கொள்ளும்போது தாங்கள் அருகிலிருப்பது நாகரிகமல்ல என்று கருதிய வானவல்லியும், தோழி வசந்தமாலையும் அங்கிருந்து மெல்ல விலகி உள்ளே சென்று விட்டார்கள். சுரமஞ்சரி தனியே நின்றாள். நகைவேழம்பர் இவ்வளவு விரைவாக அந்தச் சீனத்துக் கப்பல் தலைவனைத் தேடி அழைத்து வருவாரென்றோ அவனிடம் தனது மாடத்திலுள்ள இளங்குமரனின் ஓவியத்தைக் காண்பித்துத் தன்னுடன் இளங்குமரனும் கப்பலில் வந்ததைக் கண்டுபிடித்து விடுவாரென்றோ அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கோவிலிலிருந்து திரும்பி மாளிகைக்குள் நுழைந்ததுமே தான் இவ்வளவு விரைவில் எதிர்பாராத இந்த நிகழ்ச்சி, தன்னை எதிர் கொண்டதைக் கண்டபின் திகைப்பிலிருந்தும் அச்சத்திலிருந்தும் அவளால் விடுபட இயலவில்லை. தந்தையாரின் குரல் சீற்றத்தோடு அவளை நோக்கி ஒலித்தது;

“நமது குடிப்பெருமைக்கு மாசு தேடும் செயல்களையே தொடர்ந்து நீ செய்து கொண்டு வருகிறாய்?”

“அப்படியானால் நான் உயிர் பிழைத்து வந்ததே உங்கள் குடிப்பெருமைக்கு மாசு தேடும் செயல்தான்! என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவருக்கு நன்றியும் பரிசும் தந்து மகிழ வேண்டிய நீங்கள் அவரைப் பற்றி இப்படி நினைப்பது சிறிதும் நன்றாயில்லை அப்பா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/25&oldid=1149315" இலிருந்து மீள்விக்கப்பட்டது