பக்கம்:மணி பல்லவம் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

மணிபல்லவம்

“இப்போது இப்படி நினைக்கிற நீங்கள் முதலில் உங்களைக் காப்பாற்றியவரைப் பற்றிய உண்மையை ஏன் பொய் சொல்லி மறைத்தீர்கள், யாரோ ஒரு படகோட்டி உங்களைக் கரை சேர்த்ததாகவும் அங்கிருந்து சீனத்துக் கப்பலில் இடம் பெற்று வந்ததாகவும் கூறி உங்களோடு வந்த உதவியாளரை ஏன் மறைத்தீர்களோ?” என்று குறுக்கிட்டுக் கேள்வி கேட்டார் நகைவேழம்பர்.

“உங்களுக்கெல்லாம் அவரைப் பிடிக்காது என்று தெரிந்துதான் கூறவில்லை” என்று சுரமஞ்சரியும் இந்தக் கேள்விக்குத் தயக்கமின்றி மறுமொழி கூறினாள்.

“நீங்கள் கூறாவிட்டால் என்னம்மா? நாங்கள் கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டோமா, இல்லையா? சொந்த மகளிடமே ஏமாந்து போய் நிற்கிற அளவுக்கு உங்கள் தந்தை ஆற்றல் குறைந்தவரில்லை, அவரும், அவரைச் சுற்றியிருப்பவர்களும் ஏழு உலகத்தை ஏமாற்றி விட்டு வருகிற சாதுரியம் படைத்தவர்கள்” என்று நகைவேழம்பர் தற்பெருமை பேசிச் சிரித்தபோது, தன் தந்தையும் அவரோடு சேர்ந்து சிரித்ததைக் கண்டு சுரமஞ்சரி தன் மனத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் பொறுமையிழந்து கொதிப்படைந்தாள்.

“என் தந்தையார் பெருமைப்படுவதற்கு மற்றவர்களை ஏமாற்றுகிற திறமை அவரிடம் இருப்பது ஒன்றுதான் காரணமென்று அவருக்கு முன்பே துணிந்து கூறுகிற அளவுக்கு அவர் உங்களுக்கு இடமளித்திருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்” என்று சுரமஞ்சரி குமுறிப் பேசத் தொடங்கிய போது—

“பேசாதே; நீ உள்ளே போ!” என்று அவளை நோக்கி இரைந்தார் அவள் தந்தையார். தலை குனிந்தபடி உள்ளே செல்வதைத் தவிர சுரமஞ்சரியால் அப்போது வேறு ஒன்றும் பேச முடியவில்லை. தன் தந்தையார் நகைவேழம்பருக்கு அளவு மீறித் தகுதி மீறி இடங் கொடுப்பதன் காரணம் என்ன என்பது அவளுக்கு விளங்காத மர்மமாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/26&oldid=1149316" இலிருந்து மீள்விக்கப்பட்டது