338
மணிபல்லவம்
மனிதரைத் தேடிக் கொண்டு போகிறீர்களோ, அந்த மனிதர் ஒருமுறை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்ள மறுத்த பரிசு இது! நீங்களும் இதை மறுத்தால் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.”
“அவர் இதை மறுத்த காரணம் என்னவோ?”
“அவர் காரணங்களைக் கடந்த மனிதர். எதையுமே பிறரிடமிருந்து ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்! உங்கள் அன்பு உள்பட...”
கேட்க வேண்டாததைக் கேட்க நேர்ந்து விட்டது போல் சுரமஞ்சரியின் முகம் சுருங்கிச் சிறுத்தது. போகிற போக்கில் ஓவியன் தன்னைக் குத்திக் காட்டிப் பேசி விட்டுப் போகிறானே என்று அவள் மனம் புண்பட்டது. அதை மறுக்க முயன்றவாறே மணிமாலையை அவன் கைகளில் கொடுத்துவிட்டு வணங்கினாள் அவள். அவன் வாங்கிக் கொண்டான்.
வசந்தமாலை மாளிகையின் வாயில் வரை துணைவந்து ஓவியனை வழியனுப்பினாள். அதே சமயம் அவர்கள் வெளியே போயிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நகைவேழம்பர் என்ற ஒற்றைக்கண் புலி வேறொரு பக்கமாக வெளியேறித் தன்னைப் பின்தொடர்ந்து விரைந்ததை ஓவியன் கவனிக்கவில்லை. வசந்தமாலை கவனித்தாள். ஆனால் அவளால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஓவியனை அனுப்பிவிட்டு மாளிகைக்கு உள்ளே திரும்பும்போதுதான் கவனித்தாள்.
வானளாவி நின்ற அந்தப் பெரு மாளிகையிலிருந்து வெளியேறிப் பட்டினப்பாக்கத்தின் அகன்ற வீதியில் விரைந்து விரைந்து நடந்தபோது ஓவியன் மணிமார்பனின் உள்ளத்தில்