பக்கம்:மணி பல்லவம் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

369

வில்லை. நான் தன்னுடைய உடைமை என்று பேதைத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் வீரசோழிய வளநாடுடையார் பெண் முல்லையிடம் நான் தோற்கவில்லை. அவர்களெல்லாம் என்னுடைய காதலைக்கூடச் சம்பாதிக்க முடியவில்லை. எண்ணெயின்றி முடிந்த சடையும், துறவுக்கோலமுமாக இப்போது என் எதிரே இருக்கும் விசாகை என்ற இந்தப் பெண்ணோ என்னைத் தன்மேல் பக்தி செலுத்துவதற்கே தூண்டுகிறாளே! இது என்ன விந்தை உடம்பும், மனமும், புலன்களும், எல்லாமே வலிமையாக இருக்க வேண்டுமென்று கருதும் நீலநாக மறவர், மனம் வலியதாயிருந்தால் மட்டும் போதுமென்று கூறும் விசாகை, வாழும் தத்துவமாகத் தோன்றும் பூம்பொழி நம்பியாகிய நாங்கூர் அடிகள், எல்லாரையும் இணைத்து நினைத்தது இளங்குமரனின் மனம். தான் கற்பதற்கிருந்த சுவடிகள் தவிர உலகமே பக்கத்துக்குப் பக்கம், ஏட்டுக்கு ஏடு, வேறுபாடுள்ள மாபெருஞ் சுவடியாகத் தோன்றியது அவனுக்கு.

சிறிது நேரம் கழித்து நாங்கூர் அடிகள் பூம்பொழிலில் உலவச் சென்றார். கிரந்தசாலையில் விசாகையும், இளங்குமரனும் மட்டுமே இருந்தார்கள். அப்போது விசாகை, இளங்குமரன் சற்றும் எதிர்பாராத காரியமொன்றைச் செய்தாள்.

“இதில் ஏதேனும் இடுங்கள்! இன்றைக்கு முதல் பிட்சை உங்களுடையதாக இருக்கட்டும்” என்று அட்சய பாத்திரத்தை அவனுக்கு முன் நீட்டினாள். கையில் சுவடிகளைத் தவிர இளங்குமரனிடம் அப்போது வேறு ஒன்றும் இல்லை. இளங்குமரன் எழுந்து நின்றான். அவனுக்கு மெய்சிலிர்த்தது.

“என் இதயத்தில் உங்கள்மேல் எல்லையற்றுப் பெருகும் தூய்மையான பக்தியையே இந்த அட்சய பாத்திரத்தில் இடுகிறேன். அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறிப் பிட்சைப் பர்த்திரத்தின் விளிம்பைத் தொட்டு வணங்கினான் அவன்.

ம-24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/75&oldid=1149690" இலிருந்து மீள்விக்கப்பட்டது