பக்கம்:மணி பல்லவம் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

மணிபல்லவம்

இருவரும் தேரில் ஏறிக் கொண்டதும் ஊழியன் தேரைச் செலுத்தினான். மணிகளை ஒலித்துக் கொண்டு தேர் விரைந்தது. சுரமஞ்சரியும், வசந்தமாலையும் மாளிகையை அடைந்தபோது முன் கூடத்தில் தந்தையார் அமர்ந்திருந்தார். மாலையில் பாண்டிய நாட்டுக் கொற்கையிலிருந்தும், சேரநாட்டு விழிஞத்திலிருந்தும் வாணிகக் கப்பல்கள் வந்து துறை சேர்ந்திருந்தன போலும். தந்தை யாருக்கு முன்னால் முத்துக் குவியலும் முற்றிப் பருத்து நீண்ட யானைத் தந்தங்களும் காட்சியளித்தன. அவற்றைத் துறைமுகத்திலிருந்து சுமந்து வந்த கப்பல் ஊழியர்கள் சுற்றிலும் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். தந்தையார் அவர்களிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.

இவற்றில் ஒன்றும் புதுமை இல்லை. அடிக்கடி அந்த மாளிகையில் தென்படுகிற காட்சிதான். சுரமஞ்சரியும் வசந்தமாலையும் உள்ளே போய்த் தங்களுக்காகக் காத்திருந்த தாயுடனும், வானவல்லியுடனும் உண்பதற்குச் சென்றார்கள்.

“இன்றைக்கு முத்துக் கப்பல் வந்திருக்கிறது அம்மா! நல்ல முத்துக்களாகத் தேர்ந்தெடுத்து எனக்கு ஒரு மாலை செய்துகொள்ளப் போகிறேன்” என்று வானவல்லி தாயிடம் கூறினாள்.

“உனக்குத்தான் நாலைந்து முத்து மாலைகள் இருக்கின்றனவே. இன்னும் எதற்கு?...”

“முத்துக்களில் ஒவ்வொன்றும் ஒரு சாதி அம்மா. இந்தக் கப்பலில் இன்றைக்கு வந்திருக்கிற முத்துக்கள் எல்லாமே நன்றாக விளைந்தவை. பொதிகளை இறக்கிப் பிரித்துக் குவித்தவுடனே நான் போய்ப் பார்த்தேன்.”

“முத்துக்களைப் புகழ்ந்து நீ இவ்வளவு பேசுகிறாயே வானவல்லி! உன் பக்கத்தில் அமர்ந்து உண்ணுகிற சுரமஞ்சரியும் அவள் தோழியும் ஏன் இப்படிப் பேசாமல் அமைதியாயிருக்கிறார்கள்?” என்று சொல்லி நகைத்துக் கொண்டே சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் உற்றுப் பார்த்தாள் அன்னை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/94&oldid=1149709" இலிருந்து மீள்விக்கப்பட்டது