பக்கம்:மணி பல்லவம் 4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

716

மணிபல்லவம்

பார்த்துச் சலித்துப் போயிருந்தாலும் இன்று இப்படி அடைபட்டுக் கிடக்கிறபோது இன்னும் எதையோ பார்ப்பதற்கு விட்டு வைத்திருப்பது போலவும், அதை உடனே போய்ப் பார்த்துவிட வேண்டும் போல வும் அவள் மனம் குறுகுறுப்பு அடைந்தது. இந்தக் குறு குறுப்புத் தன் மனத்தில் அப்போது ஏற்படுவதன் காரணம்தான் அவளுக்கே விளங்கவில்லை.

‘எந்தப் பொருளின்மேலாவது அளவுகடந்து ஆசைப் படும்போது இப்படி விடுபட்டுப் பறக்க வேண்டும் போலத் தவிப்பது மனத்தின் இயல்பா? அல்லது ஏக்கத்தின் விளைவா?’ என்று முடிவு கிடைக்காத சிந்தனையில் அழுந்தி நின்றாள் அவள்.

‘நினைவுகளால் மனத்தின் பசி தணிவதில்லை. நினைவுகள்தாம் பசியை வளர்க்கின்றன. நினைவுகளே பசியாகவும் செய்கின்றன. நினைவுகள் எதை அடையத் தவிக்கின்றனவோ, அதை அடைகிற அநுபவம்தான் மனத்தின் பசிக்கு உணவு’ என்று எண்ணிக்கொண்டே இருள் பரவத் தொடங்கியிருந்த நகரிலிருந்து தன் கண்களையும், சோகம் பரப்பிக் கொண்டிருந்த குழலிசையிலிருந்து தன் செவிகளையும் விடுவித்து மீட்டுக் கொண்டு அவள் உள்ளே திரும்பியபோது பூக்களின் மணமும், அகிற்புகையின் வாசனையும் முன்னைக் காட்டிலும் அதிகமாக நெருங்கிக்கொண்டு பரவி அவளைத் தாக்கின.

‘பரிபூரணமான இசையின் விளைவு அழுகையாயிருக்கிறது. நல்ல மணங்களை உணரும்போது ஆழ்ந்த துயரங்கள் நினைவு வருகின்றன. உயர்ந்த கவிதைகளின் பொருள் புரியும் போது மனத்தில் ஏக்கம் பிறக்கிறது. மறைகின்ற கதிரவனையும் மேற்கு வானத்தையும் காணும்போது உலகத்தின் கடைசிக் காட்சியைப் பார்ப்பதுபோல் எண்ணங்களில் ஓர் அநுதாபம் பொங்குகிறது. நான் இன்று மட்டும் இவற்றை உணர்கிறேன். எல்லாக் காட்சியிலிருந்தும், எல்லா உணர்விலிருந்தும் ஆழ்ந்த துயரத்தைத் தவிர வேறொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/107&oldid=1231537" இலிருந்து மீள்விக்கப்பட்டது