பக்கம்:மணி பல்லவம் 4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

754

மணிபல்லவம்

அவனும் அதைச் செய்தான். மீண்டும் சிலவிநாடிகள் மரண வேதனை. மீண்டும் சில விநாடிகள் தெளிவு. அந்த நிலையில் அவர் அருவாளனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். விரக்தியினாலும் இனி நாம் ‘சாகத்தான் போகிறோம்’ என்ற உறுதியினாலும் அப்போது மிகமிக மனத் தெளிவுடன் அவர் அவனிடம் ஒளிவு மறைவின்றிப் பேசினார். “அருவாளா! நீ இப்பொழுது என்னைப் பார்த்து பரிதாபப்படுவது போல் நான் சாவது ஒன்றும் அவ்வளவு வேதனையான காரியமில்லை எனக்கு. ஏனென்றால் இந்த உலகத்தில் நாளைக்கு வாழ்வதற்காக என்று நான் எதையும் சேர்த்து வைத்திருக்கவில்லை. பெருநிதிச் செல்வனைப் போலச் செல்வத்தை மலை மலையாகக் குவித்து வைத்திருந்தால் அதைக் காக்கவும் அனுபவிக்கவும் ஆசைப்பட்டாவது நாளைக்கும் அதற்கு அப்புறமும் நான் வாழ்வதற்கு விரும்ப வேண்டும். பாவங்களைத் தவிர வேறு எவற்றையும் இனிமேல் அனுபவிப்பதற்காக என்று நான் சேர்த்து வைக்கவில்லை. என்னுடைய கணக்கில் இப்போது நிறையப் பாவங்கள் இருக்கும். ‘அந்தப் பாவங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு நான் மீண்டும் பிறக்க வேண்டியிருக்குமே’ என்று நீ சந்தேகப்படுவாய். பிறந்தால் இன்னும் புதிதாக நிறையப் பாவங்கள் செய்து அடுத்த பிறவியிலும் இப்படியே கெட்டவனாக வாழ்ந்து விடுவேனோ என்றுதான் நான் மறுபடி பிறக்கவே பயப்படுகிறேன். இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று நியாயமோ வரம்போ உள்ள எந்த ஒரு வாழ்க்கையையும் இந்தப் பிறவிலேயே பழகிக் கொள்ள முடியாதவன் அடுத்த பிறவியில் மட்டும் எப்படி ஒழுங்காக வாழமுடியும்’ என்று நானே என்னைப் பற்றிச் சந்தேகப்படுகிறேன். உனக்கு நன்றாக என்னைப் பற்றித் தெரியும். நான் நிறையக் கொலை செய்திருக்கிறேன். நிறையக் கொள்ளையடித்திருக்கிறேன். நிறையப் பொய் சொல்லியிருக்கிறேன். நிறையச் சூழ்ச்சி செய்திருக்கிறேன் ஆனால் அவ்வளவும் எனக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/145&oldid=1231570" இலிருந்து மீள்விக்கப்பட்டது