பக்கம்:மணி பல்லவம் 4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

691


“நான் வாரிக் கொண்டு போக வேண்டிய பொருள் இதோ இங்கே இருக்கிறது.”

இந்த வார்த்தைகளை மீண்டும் நகைவேழம்பர் கூறியபோது உலகம் அழிகிற ஊழியன் கடைசிக் குரல் போல் அவை பயங்கரமாய் ஒலித்தன. பெருநிதிச் செல்வரின் நெஞ்சு வெடித்துச் சிதறிவிடுவதற்குத் துடிப்பதுபோல் அவ்வளவு பரபரப்போடு அடித்துக் கொண்டது.

“இதோ புடைத்தும், தணிந்தும் இந்த இடத்தில் மூச்சு விட்டுத் துடிக்கிறதே! இந்த உயிரை முதலில் இங்கிருந்து நான் வாரிக்கொண்டு போக வேண்டும்.”

காற்று சீறிக் கடல் பொங்குகிற ஊழிக் காலத்தின் கொடுமையை நினைவூட்டுகிற சீரழிவின் சொல்லுருவமாய் இந்த வார்த்தைகள் மறுபடியும் நகைவேழம்பருடைய நாவிலிருந்து ஒலித்தன. இப்போது அவருடைய குரல் ஒலி முன்னைக் காட்டிலும் உரத்திருந்தது. சொற்கள் தடுமாறி உடைந்த குரலில் அவருக்கு மறுமொழி கூறினார், பெருநிதிச் செல்வர்.

“என்னிடமிருந்து நீ எடுத்துக்கொண்டு போக வேண்டிய பொருள் இதுதான் என்று உன் மனத்தில் உறுதி செய்து கொண்டு விட்டாயானால் உன்னை நான் மறுக்கவில்லை. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த உடம்புக்குள்ளிருந்து இது வாழ்வதற்குக் காரணமாயிருக்கிற விலைமதிப்பற்ற உயிர்ப் பொருளைக் கொள்ளை கொண்டு போகிறவன் நீயாகத்தான் இருப்பாய் என்று எனக்குத் தெரியும்! இது நான் எதிர் பார்த்ததுதான்.”

அப்படியானால் மிகவும் நல்லதாகப் போயிற்று. இதை நாம் இன்னாரிடம் இழந்துவிடுவோம் என்று எதிர்பார்த்து முன்பே இழப்பதற்கு ஆயத்தமாகிவிட்ட பொருளை இழப்பது வேதனைக்கு உரியதாக இராது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/82&oldid=1231512" இலிருந்து மீள்விக்கப்பட்டது