பக்கம்:மணி பல்லவம் 4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

692

மணிபல்லவம்

"பேசு... நன்றாகப் பேசு... உனக்குத் தோன்றியதையெல்லாம் பேசு. இந்த மாளிகையின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வளர்ந்து நான் உனக்கு அளித்த சோற்றுச் செருக்கு எல்லாம் தீரும் மட்டும் பேசிக் கொண்டிரு. இப்போது என் நெஞ்சை அழுத்திக் கொண்டு நிற்கிறாயே. இந்த முரட்டுக் கையில் ஓடுகிற வலிமை இதே பெருமாளிகையில் தின்று கொழுத்த வலிமை என்பதை நீ மறந்து போயிருக்கலாம். ஆனால் நான் மறந்துவிடுவதற்கு இயலாது. உலகத்தில் உதவிகளைப் பெற்றவர்கள் நன்றி மறந்து போய்விடும் கொடியவர்களாயிருக்கலாம். ஆனால் உதவி செய்தவர்கள் அப்படிச் செய்தோம் என்பதை மறந்து விட முடியாது.”

“இருக்கலாம். ஆனால் நன்றி பாராட்டுவதும் பழைய உதவிகளை எண்ணிக்கொண்டு புதிய கெடுதல்களுக்கு அடிமைப்படுவதும் கோழைகள் செய்ய வேண்டிய காரியங்கள்.”

“உதவியும் பயனும் தந்தவர்களைக் கொலை செய்ய வேண்டியதுதான் வீரன் செய்யும் காரியங்கள் போலிருக்கிறது.”

“உங்கள் மனத்தை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியை என்னிடம் எதற்காகக் கேட்கிறீர்களோ தெரியவில்லை. பலமுறை நீங்கள் அந்தக் காரியத்தைச் செய்திருக்கிறீர்கள். ஒரு காரியத்தையே நீங்கள் செய்யும்போது அது வீரதீர சாதனையாகி விடுகிறது. அதே காரியத்தை நானும் செய்ய முன் வந்தால் அப்போது மட்டும் அதைக் கோழைத்தனம் என்கிறீர்களே, ஏன்? ஏழையின் திறமையை மட்டும் ஏன் இருட்டில் வைத்த ஓவியமாக்குகிறீர்கள்?”

இந்தக் கேள்விக்குப் பெருநிதிச் செல்வர் மறுமொழி கூறவில்லை. நகைவேழம்பரும் தமது பிடியை விடவில்லை. இருவருக்கும் இடையே அச்சமூட்டத்தக்க மெளனம் நிலவிய அந்த நேரத்தில் நிலவறைக்குள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/83&oldid=1231513" இலிருந்து மீள்விக்கப்பட்டது