பக்கம்:மணி பல்லவம் 5.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15. ஆறாத நெருப்பு

காவிரியின் நீர்ப்பெருக்கைப்போல வற்றாமல் ஒடிக் கொண்டிருந்த கால வெள்ளத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு அப்பால் மறுபடியும் ஒரு நிகழ்ச்சி.

நாற்பது ஆடிப் பெருக்குகளும், நாற்பது இந்திர விழாக்களும் கனவுகளாய் விரைந்து ஓடி மறைந்த பின் நாற்பத்தொன்றாவது ஆண்டின் சித்திரை மாதமும் பிறந்துவிட்டது!

அதோ! அந்த வள்ளுவ முதுமகன் வச்சிரக்கோட்டத்து முரசை யானை மேலேற்றி முரசறைந்து கொண்டே ‘பசியும் பிணியும் நீங்கி வளம் சுரக்க வேண்டும்’ என்ற மங்கல வாக்கியத்துடன் தொடங்கி இந்த ஆண்டிலும் இந்திர விழா வரப்போவதை நகரத்துக்கு அறிவிக்கிறான்; தேச தேசாந்திரங்களில் இருந்தெல்லாம் இந்திர விழாவுக்காக மக்கள் வந்து பூம்புகாரில் கூடுகிறார்கள். நகரம் திருவிழாக் கோலம் கொண்டு பொலிகிறது. அந்த ஆண்டு இந்திர விழாவின் கோலாகலத்தில் சமயவாதிகளின் பங்கு வழக்கம்போல் நிறைந்திருந்தது.

அந்தத் திருவிழாவின் இடையே ஒருநாள் சமயவாதிகள் மிகுந்து கூடியிருக்கும் நாளங்காடி வானவீதியில் இப்படி ஒரு விநோதமான சம்பவம் நடைபெறுகிறது.

அன்று காலையில் போது விடிந்ததிலிருந்து அந்த ஞான வீதியில் கூடியிருந்த சமயவாதிகள் யாவரும் ஒரு பெண்ணின் வாதத்துக்கு எதிர் நிற்க முடியாமல் தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணைக் கண்டு அதிசயப்படாதவர் இல்லை. வரிசையாய்ப் பலபேர்களுடைய நாவற்கிளைகளை வீழ்த்திவிட்டு வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அவள் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவள் என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூறிக் கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/165&oldid=1231894" இலிருந்து மீள்விக்கப்பட்டது