பக்கம்:மணி பல்லவம் 5.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

948

மணிபல்லவம்

அந்தப் பெண்ணைப் பற்றியச் செய்திகள் நகர் முழுவதுமே பரபரப்பாகப் பரவியிருந்தன. அவள் சமயவாதிகளை வென்று வெற்றிமேல் வெற்றி பெறும் இந்த அதிசயத்தைக் காண நாளங்காடியில் இடம் போதாமல் பெருங் கூட்டம் கூடிவிட்டது. அந்த அதிசயப் பெண்மணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் கடல் கடந்த நாடுகளிலிருந்து இந்திர விழா பார்க்க வந்தவர்கள் எல்லாம் கூட நகரின் வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதை மறந்து விட்டு நாளங்காடியில் வந்து கூடியிருந்தனர். அவ்வளவு சிறப்பாக இந்திரவிழாவுக்குப் பெருமையூட்டிக் கொண்டிருந்தது அவளுடைய அறிவுப்போர். காலையிலிருந்து பொழுது சாய்கிற நேரம் நெருங்குகிற வரை அவளை எதிர்த்து வெல்வதற்கு யாரும் இல்லை. எதிர்த்து வந்து கொடியை ஊன்றியவர்கள் எல்லாம் அவளுக்குத் தோற்றுக் கொண்டேயிருந்தார்கள்.

சாயங்கால வேளை, தோற்றவர்கள் கைகளிலிருந்து வரிசையாய்ச் சரிந்து வீழ்ந்து கிடந்த நாவற் கிளைகளுக்கு நடுவே மதம் பிடித்த பெண் யானை போன்ற அறிவுச் செருக்குடனும் “என்னை எதிர்த்து வந்து வாதிடுவதற்கு இன்னும் யாரேனும் உண்டோ?” என்ற வினாவுடனும் நிமிர்ந்து நிற்கிறாள் அந்தப் பெண். அவளுடைய வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி துறவு ஒழுக்கங்களாலும் புலனடக்கத்தாலும் பொலிவு பெற்ற முகத் தோற்றம் அவளுக்கு வாய்த்திருக்கிறது. அவளுடைய தழல் நிற மேனியைத் துறவு நெறிக்குறிய சீவர ஆடை அணி செய்துகொண்டிருக்கிறது.

கையில் கொடியேந்தி நின்றுகொண்டு மலர்ந்த முகமும் தூய சிரிப்புமாக வாதுக்கு வருகிறவர்களை எதிர்பார்க்கிறாள் அவள். அவளுக்கு எதிரியே கிடைக்க வில்லை. அந்த ஞான வீதியில் அவளே தன்னிகரற்று நின்று கொண்டிருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/166&oldid=1231895" இலிருந்து மீள்விக்கப்பட்டது