800
மணிபல்லவம்
கவனித்துக்கொண்டிருந்த இளங்குமரன் குலபதியின் இந்தச் சொற்களைக் கேட்டுத் திரும்பினான். இம்முறை தான் முதன் முதலாய்க் கூர்ந்து கவனிப்பதுபோல் அந்த மணிநாகபுரத்து இளைஞனை அவன் நன்றாகப் பார்த்தான். நீண்டு வளர்ந்திருந்த குடுமியை முடிப்பாக அள்ளிச் செருகியிருந்த தோற்றம் அந்த நாகநாட்டு இளைஞனின் முகத்துக்கு மிகவும் அழகாயிருந்தது. இளமை அரும்பும் பருவத்து முக அழகு தவிர நீண்டு வடிந்த அளவான செவிகளில் நாகர்த்தினங்கள் பதித்த காதணிகளையும் அழகுற அணிந்திருந்தான் அவன். ஆண் மகனாக இருந்தாலும் அவன் சிரிக்கும்போது முத்துதிர்வது போல நளினமானதொரு கவர்ச்சியும் அந்த முகத்தில் வந்து பொருந்தியது. தோற்றத்தில் அதிக உயரம் இல்லா விட்டாலும் அவனுக்கு அமைந்த உயரமே அவனை அழகனாகத்தான் காண்பித்தது. சில நிழல் மரங்களைப் பார்த்தால் உடன் அங்கே உட்கார வேண்டும் என்று ஆசை வருவதைப்போல் குலபதியின் முகத்தை ஒருமுறை பார்க்கிறவர்களுக்குச் சிறிது நேரம் வேறு காரியங்களை மறந்து அந்த முகத்தை மட்டும் பார்க்கலாம் என்று தோன்ற முடியும் எனப் புரிந்துகொண்டான் இளங்குமரன். தன் முகத்தை இளங்குமரன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் குலபதி சுறுசுறுப்பாக வேறு ஒரு காரியம் செய்தான். இளங்குமரனுடைய யிைலிருந்த முத்து மாலையை அவனது விரல்களின் பிடியிலிருந்து சிரித்துக் கொண்டே மெல்ல விடுவித்துத் தன் கைகளாலேயே அவனுடைய கழுத்தில் அணிவித்தான். இளங்குமரனால் அந்தப் பிள்ளையின் செயலை மறுக்க் முடியவில்லை.
“வாருங்கள்! இனி. நாம் உள்ளே போகலாம்’ என்று சொல்லிக் கொண்டே அப்போது வளநாடுடையாரும் வீதியிலிருந்து திரும்பி வந்தார். மீண்டும் மூன்று பேருமாக அந்த மாளிகைக்குள் துழையும்போது வளநாடுடையார் கூறினார்
“இளங்குமரா! இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நீ திருநாங்கூரில் இருந்த காலத்தில் நான் வந்து