நா. பார்த்தசாரதி
861
கடமை நிறைவேறிய பின்னும் பற்றுப் பாசங்களை உதிற முடியாமல் நான் இருந்து விடுவேனாயின் என்னுடைய துறவு நெறி பொய்யாகிவிடும்.”
‘சுவாமீ! நீங்கள் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டுப் போகிற போக்கில் நான் எதையும் உதற முடியாமல் என்னைக் கோபதாப உணர்ச்சிகளில் பிணைத்துவிட்டுப் போகிறீர்களே? இது நியாயமா?”
“நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டுதான் தீர வேண்டும். நீ இப்போது கட்டுப்படுவதும் அப்படித்தான். இரும்புக் கவசங்களாலும், ஆயுதங்களாலும் கட்டுண்டு உடம்போடும் விடுபட்ட மனத்தோடும் நீலநாகர் வாழவில்லையா? அப்படி நீயும் வாழ்வாய் எனக்கு விடை கொடு.”
அருட்செல்வருடைய பிரிவு வேதனையைக் கொடுத்தாலும் இளங்குமரன் அவருடைய விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க விரும்பாமல் விடை கொடுத்தான். எட்டு அங்கமும் தோய வீழ்ந்து வணங்கி அவருடைய பாதங்களைக் கண்ணில் ஒற்றிக்கொண்டான். மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு அவர் சமந்தகடத்திற்கு புறப்பட்டுப் போனார். அனலும் வெப்பமும் மிகுந்த நேரத்தில் எங்கிருந்தாவது நல்ல குளிர் காற்றுச் சில்லெனப் புறப்பட்டு வருவதுபோல் வேதனையும் துன்பமும் படுகிறவர்களின் வாழ்க்கையில் உதவி புரிவதற்கென்றே இப்படிச் சில ஞானிகள் நடுவாக வந்து பொறுப்புடனே துணை செய்துவிட்டுப் போகிறார்கள். இப்படிப் பயன் கருதாமல் உதவி செய்ய வருகிறவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாயிருக்க வேண்டும் என்று அருட்செல்வரைப் பிரிந்தபோது இளங்குமரன் எண்ணினான். எல்லாம் புரிந்துகொண்டு எவற்றை உணர வேண்டுமோ அவற்றை உணர்ந்து கிளர்ச்சியுற்ற மனத்தோடு நின்ற இளங்குமரன் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சி மாறுதல்களை ஒவ்வொன்றாக நினைத்தான். படிப்படியாக நடந்து