வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 67
5-ம் அதிகாரம் சங்கடத்தின் மேல் சங்கடம்
தனது தாயின் அந்தப்புரத்தினின்று வெளிப்பட்ட மாரமங்கலம் மைனர் நேராக துரைராஜாவின் பங்களாவை அடைந்தான். அப்போது மாலை நேரம் ஆதலால், ராப்போஜனத்தை அப்போதே முடித்துக் கொள்ளக்கூடாமல் போனதுபற்றி அவன் பொன்னம் பலத்தைக் கடைக்கு அனுப்பி, சிற்றுண்டிகள் தருவித்து உட்கொண்டு துரைராஜாவினிடம் விடைபெற்றுக் கொண்டு தனது ஏற்பாட்டின்படி சரியாக ஏழுமணனிக்கு கருப்பாயின் வீட்டை அடைந்தான். அப்போது முன்னிருட்காலம் ஆதலால், ஏழு மணிக்கே நன்றாக இருண்டு இருந்தது. மைனரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் கருப்பாயி திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். வாசலில் விளக்கு வைக்கப்படாமல் இருந்தது. வயல்களுக்கும் தோப்புகளுக்கும் நடுவில் தனியாக இருந்த இடம் ஆதலால், அது மிகவும் பயங்கரமான இருந்தது. மைனர் துணிவற்ற கோழை மனத்தினன் ஆனாலும், மோகனாங்கியின் சிநேகம் தனக்கு ஏற்படப் போகிறது என்ற ஆசையினாலும், அவள்மீது கொண்ட மோகாவேசத்தினாலும் தூண்டப்பட்டவனாய், துணிவடைந்து அங்கே போய்ச் சேர்ந்தான். அவனைக் கண்ட உடனே கருப்பாயி எழுந்து வாசலில் வந்து புன்னகையும் மகிழ்ச்சியும் காட்டிய முகத்தோடு அவனை வரவேற்று “வாங்க சாமி! வாங்க வாங்க” என்று உபசரித்து அழைக்க, அவனும் புன்னகை செய்தவனாய், திண்ணையில் உட்கார முயன்றான்.
உடனே கருப்பாயி, “சாமி உள்ளற போயிறலாம். இஞ்சே இருட்டுலே குந்துவானே? அம்பட்டச்சி விடாச்சேன்னு ரோசனை பண்ணாமே வாங்க. உள்ளற அசிங்கம் கிசிங்கம் ஒண்னுமில் லிங்க. சுத்தமா இருக்குது; வந்து பாருங்க” என்று தேன் போல மொழிந்து முன்னாகச் செல்ல, மைனர் அவளது வேண்டுகோளை மறுக்க மாட்டாமல், அவளுக்குப் பின்னால் தொடர்ந்து சென்றான். உள்ளே இருந்த நடை, தாழ்வாரம் கூடம் முதலியவற்றைத் தாண்டி இருவரும் உள்புறம் சென்றனர். அது அதிக உயரமில்லாத சிறிய ஒட்டு வீடு ஆதலால், இரண்டு மூன்று முறை நிலைப்படி