பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 அ.ச. ஞானசம்பந்தன்


களின் இடையேயும் அடிப்படைக் கலப்பையும், உறவையும் காண்கின்றோம்.

இன்றைக்கு மேலைநாட்டவரைப் பின் பற்றுவதாகச் சொல்லித் திரியும் நம்மிடையே பல சுவையான அனுபவங்களைக் காணலாம். ஓர் இடத்தில் சொற்பொழிவுக்குப் போனேன். அங்கே துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. அது என்னைப் பற்றிய பிரசுரம். எனக்கும் வழங்கப்பட்டது. ‘விஞ்ஞானம் படிக்கப்போய்த் தமிழிலேயே விழுந்து எழுந்த ஞானசம்பந்தமே! பக்திமான் கண்டது பிரசாதம். விஞ்ஞானி கண்டது மின்சாரம். நீ பிரசாதம் வழங்க வந்தாயே தவிர, மின்சாரம் ஆக்கித் தருகிற ஆற்றலை ஏன் தரக்கூடாது' என்று அழகாக எழுதியிருந்தனர். இந்த மாதிரி அடிப்படையே இந்த நாட்டில் வளர்ந்தோங்கக் காண்கின்றோம். மின்சாரம் வழங்கவென்று ஒரு கூட்டத்தார்! பிரசாதம் வழங்க வென்று ஒரு கூட்டத்தார்! மக்கட் கூட்டத்தையே இப்படி இங்கே வேற்றுமைப்படுத்தி விட்டோம்! இவர்கள் இப்படி வேற்றுமைப்படுத்திப் பேசும் இதே நேரத்தில் மின்சாரம் கண்ட நாட்டின் நிலையையும் காண வேண்டும். ஹறிப்பிகள் என்பவர்களைச் சென்னையில் அரிதாகக் காணலாம்; பம்பாயில் இன்னும் கொஞ்சம் மிகுதியாகப் பார்க்கலாம்; நேபாளத்தில் நிரம்பப் பார்க்கலாம். கோவா பகுதியில் ஏராளமான ஹறிப்பிகளைப் பார்க்கலாம். அவர்கள் இன்பமாக எளிமையாக வாழ விரும்புகின்றனர்.

இவர்களைப்பற்றி எளிதாகப் பேசி, அவ்வளவு எளிதாகத் தள்ளிவிடவும் முடியாது. அவர்களில் பலர் இரண்டு டாக்டர் பட்டங்கள் பெற்றவர்கள். நம்