பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

9


என்பது பாடல். மற்றும், செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதம் என்னும் நூலில் உள்ள,

“இடையுறும் என்பினை நரம்பின் ஆர்த்திடாப்
புடையுறும் இறைச்சியால் பொதிந்து போக்கற
மிடைதரு தோலினான் வேயப் பட்டதோர்
உடலினை யானென உரைக்கல் ஒண்னுமோ.”

என்னும் பாடலும் (5, 2: 31) உடலிடை நரம்புக்கு உள்ள தொடர்பை அறிவிப்பது காணலாம். இக்கால அறிவியல் தோன்றுவதற்குப் பலநூற்றாண்டுகட்கு முன்பே தமிழர்கள் நரம்பின் இயக்கத்தை அறிந்திருந்தனர் என்பதற்காக இவை ஈண்டு எடுத்துக்காட்டப் பட்டன. இனி அடுத்து முடிவுக்கு வருவோம்:

குறிப்பிட்ட ஒரு துண்டல்-துலங்கல் தொடர்பான செயல் முழுவதும் ஒரு மறிவினை அலகு (Reflex Unit) ஆகும். இவ்வாறு பல அலகுகள் உள்ளன. இத்தகைய தூண்டல் - துலங்கல் செயல்களின் தொகுப்பே உளம் (மனம்) ஆகும் என்பது இக்கால உளவியல் கொள்கை. எனவே, ஒருவகை உடல் இயக்கச் செயல்பாடே - குறிப்பாக மூளை இயக்கமே - மனம் என உணரப்படுகிறது. இக் கொள்கை மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இங்கே ஒரு சாராரின் மாறுபட்ட கருத்து ஒன்றுக்குப் பதில் தரவேண்டியுள்ளது. அஃதாவது:-

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி களின் வாயிலாகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல நுகர்ச்சி மூளையால் நடைபெறுகிறது என்பது உண்மை; ஆனால் மனத்தின் ஈடுபாடின்றி இந்நுகர்ச்சி நடைபெற முடியாது. நாம் தேடிக் கொண்டு போகும் ஒருவர் எதிரே வருவதை நம் கண் பார்த்தாலும், மனம் வேறொன்றில் நாட்டம் கொண்டிருந்தால்