பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மனத்தின் தோற்றம்



வருபவரை நாம் இனம் கண்டு கொள்ள முடியாது. இது போலவே, நாம் இருக்கும் இடத்தில் திடீரெனக் கெட்ட நாற்றம் வீசினும், மனம் வேறொன்றில் ஈடு பட்டிருப்பின் கெட்ட நாற்றம் நமக்குப் புலப்படாது.நாம் அங்கேயே இருப்போம். நம்மிடம் ஒருவர் ஏதாவது சொல்லுங்கால், மனம் ஈடுபடாவிடின் அவர் சொன்னது கேட்காது-புரியாது. உண்ணுங்கால் மனம் வேறொன்றில் ஈடுபட்டிருப்பின் சுவை தெரியாது. மனம் வன்மையாக வேறொன்றில் நாட்டம் கொண்டிருப்பின், உடம்பில் எறும்பு கடித்தாலும் தெரியாது. இச்செய்திகளை அடிப் படையாகக் கொண்டு நோக்கின், மனம் என்னும் ஓர் உட் கருவி தனியாக இருப்பது புலனாகும் - என்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர். இதற்குரிய பதில் வருமாறு:

ஒரு பொறி ஏதேனும் ஒன்றில் முனைப்பாக ஈடுபட் டிருக்கும் போது, மற்ற நான்கு பொறிகளுமே அடங்கி யிருக்கக் கூடும். சுந்தரர் என்னும் சிவனடியார், கடவுள் திருமேனிச் சிலையை மிக்க ஆர்வத்துடன் கண்ணால் கண்டு வணங்கிக் கொண்டிருந்தபோது, மற்ற நான்கு பொறிகளும் அடங்கிக் கண் என்னும் பொறியோடு ஒன்றியிருந்ததாகச் சேக்கிழார் என்பவர், பெரிய புராணம் என்னும் நூலின் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்:

“ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள”
(பெரிய புராணம்-தடுத்தாட் கொண்ட புராணம்-106)

என்பது அவரது பாடல் பகுதி. மூளை முனைப்பாக, ஏதேனும் ஒரு தூண்டலுக்குத் துலங்கிக் கொண்டிருக்கும் போது, மற்ற பொறிகளின் தூண்டலில் கவனம் இல்லாமல் இருப்பது இயற்கையே. இங்கே மனம் என்னும் ஒன்று தேவையில்லை. நாம் தேடிக்கொண்டு போகும் ஒருவர் எதிரே வந்து கொண்டிருப்பதை நம் கண் பார்த்தாலும், இந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்காமல், நாம் வீட்டி