பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

11


லிருந்து புறப்படும்போது மனைவியோ - மக்களோ கடையில் வாங்கி வரச்சொன்னதிலேயே முனைப்பாகப் பின் நோக்கி ஈடுபட்டிருந்தால், அந்தத் தூண்டலுக்கு ஏற்பவே நாம் துலங்கிக் கொண்டிருப்போம்; அதனால் எதிரே வருபவரை இனம் கண்டுகொள்ள முடியாமற் போகிறது. இவ்வாறு எல்லாப் பொறிகளின் துண்டலுக்கும் கொள்ள வேண்டும். இது கவனக்குறைவு அன்று; இது கவன மாற்றம் ஆகும். அஃதாவது, ஒரு தூண்டலுக்குத் துலங்க வேண்டிய நேரத்தில் வேறு துண்டலுக்குத் துலங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது இதற்குப் பொருளாகும். இவ்வாறு ஒன்று நிகழ வேண்டிய நேரத்தில் வேறொன்று வந்து குறுக்கிட்டுத் தடுப்பதற்கு உளவியல் அறிஞர்கள் ‘பின் செயல் தடை' (Retroactive Inhibition) எனப் பெயர் வழங்குவர்.

நினைவும் மறதியும்:

ஈண்டு ‘மறதி’ (Forgetfulness) என்பது ஒப்புநோக்கத் தக்கது. ஒன்றை நினைத்திருக்க வேண்டிய நேரத்தில், அதனை விட்டு, வேறொன்றில் நினைப்பு இருப்பது தானே மறதி! எனவே, நினைவு மாற்றமே மறதி எனப்படும். நினைவும் மறதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் (Reciprocal) போன்றவை எனலாம். ஒன்றின்றி மற்றொன்றில்லை. ஒன்றை மறந்தால்தான் இன்னொன்றை நினைக்கலாம் - ஒன்றை நினைத்தால்தான் மற்றொன்றை மறக்கலாம். மரத்தால் செய்யப்பட்ட யானையை எடுத்துக் கொள்வோம். அதை மரம் என்று நினைக்கும்போது யானையை மறந்து விடுகிறோம் - அதை யானை என்று நினைக்கும்போது மரத்தை மறந்து விடுகிறோம். இதைத் தான், திருமூலர் தமது திருமந்திர நூலில்,

“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை”.
(எட்டாம் தந்திரம் - பராவத்தை - 2290)