பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

133


“கள்ளழிந்து ஒழுகு செம்பொன் கடுக்கை
வேய்ந்து இலகு வேணி
வள்ளல் வெண் புகழ் திரண்ட
வளங்கெழு கைலைக் குன்று” (2-4)

என்பது பாடல் பகுதி. கைலாச கதியிலேயே மற்றொரு சுவையான பாடல் உள்ளது.

மூன்று அகவை உடைய ஞானசம்பந்தர் சிவனைப் பாடப் பால் சுரந்தளித்த உமையின் கொங்கையின் வெண்மைப் புகழ்போல, ஒளி வீசும் வெண்மையான முத்து மாலை அந்த உமையின் கொங்கைமேல் அணியப்பட் டுள்ளதாம். பாடல்:

“அரவுலாஞ் சடை அண்ணலைப் பிள்ளைதான்
பருவம் மூன்றினில் பாட இன்பால் தரும்
பொருவில் கொங்கைப் புகழெனப் பொங்கொளி
மருவும் ஆர மணிவடம் தாழ்ந்துற” (22)

என்பது பாடல். அண்ணல் = சிவன், பிள்ளை - ஞான சம்பந்தர்.

பிரபுலிங்க லீலைப் பாடலுக்கு மேலும் அரண் செய்ய இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் இன்னும் சில காண்போமே. சிலப்பதிகாரத்திலுள்ள -

“அந்தி வானத்து வெண்பிறை தோன்றி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து” (4-23, 26)

என்னும் பகுதியில் உள்ள வெள்ளி விளக்கம் என்பதற்குப் புகழ் என்னும் பொருள் கூறப்படுகிறது. மற்றும்,

“இகல் என்னும் எவ்வநோய் நீங்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்” (853)

என்னும் குறளிலுள்ள விளக்கம் என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் முதலியோர் புகழ் என்னும் பொருளே தந்துள்ளனர்.