பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

177



என்னும் பகுதி அறிவிக்கும். மற்றும், மணிமேகலையின் தோழியாகிய சுதமதி என்பாள், உதய குமரனை வாழ்த்திப் பேசினாள்:

“வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி
தீநெறிப் படரா கெஞ்சினை ஆகுமதி” (5:28,29)

என்பது காண்க.

பேசத் தொடங்குமுன் மன்னரை வணங்கி வாழ்த்துவது போலவே பேச்சின் முடிவிலும் வாழ்த்துவது மரபு. சுதமதி இவ்வாறு உதயகுமரனை வாழ்த்தி முடித்தாள். இதனை,

“மிகைநா இல்லேன் வேங்தே வாழ்கஎன” (5:79)

என்பதால் அறியலாம். சிலப்பதிகாரத்திலும், இவ்வாறு மன்னனிடம் பேசத் தொடங்கும்போதும் முடித்த போதும் வாழ்த்தும் மரபு பல காதைகளில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரட்டைக் காப்பியங்கள் ஆயிற்றே.

குமரியும் காவிரியும் ஆடல்

வடபுலத்திலிருந்து தமிழகம் வருவோர், குமரியிலும் காவிரியிலும் குளித்தல் வழக்கமாம். சுதமதியின் தந்தை வட புலத்திலிருந்து குமரியும் காவிரியும் ஆடி (நீராடி) வந்தோருடன் சேர்ந்துகொண்டு புகார் வந்தானாம். இதனை,

“குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறைப்
பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல்மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய
வடமொழி யாளரொடு வருவோன்” (5:37-40)

என்பதால் அறியலாம். குரங்கு செய்கடல் என்பது, இராமனுக்காக வானரர்கள் கடலில் அணை கட்டிய செயலைக் குறிக்குமாயின், இராம - இராவணப்போர் இந்தியாவிற்குள்ளேயே நடைபெற்றது என்போரின் ஆராய்ச்சிக் கருத்து அடிபட்டுப் போகலாம்.