பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

மனத்தின் தோற்றம்



“அமரக மருங்கில் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒரு மகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென்” (6,137-141)

என்பது பாடல் பகுதி.

குல தெய்வப் பெயர் இடல்

தங்கள் குல தெய்வத்தின் பெயரைத் தம் பிள்ளை கட்கு இடுவது ஒரு வகை மரபு. முருகன் பெயர்களையே வைக்கும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், திருமாவின் பெயர்களை எந்த அவதாரப் பெயர்களாயிருந்தாலும் சரி . வைப்பவர்கள் உளர். ஐயனார் பெயர்களும் அப்படியே. அங்காளம்மனைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள் அங்கம்மா, அங்கப்பன் போன்ற பெயர்களைக் கொள்வர். அரங்கன் தொடர்பான பெயர், பாண்டுரங்கன், அரங்கசாமி, (அ)ரங்கன், (அ)ரங்கநாயகி, (அ)ரங்கநாதன் முதலிய பெயர்களையே வைக்கும் குடும்பம் உண்டு. இவ்வாறு, கோவலன், தங்கள் குல தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்தின் பெயரையே தன் மகளுக்கு மணிமேகலை என வைத்தான்.

இவ்வாறு இன்னும் பல பழைய பழக்கவழக்க மரபுகள் மணிமேகலைக் காப்பியத்தில் சுவைபெறக் கூறப்பட்டுள்ளன.