பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

41



மலரில் சென்று அத்துணுக்குகளைத் தற்செயலாகச் சேர்க்கின்றன. மலர்களிடம் கவர்ச்சியில்லையென்றால் வண்டுகள் அவற்றை நோக்கிச் செல்லமாட்டா அல்லவா?

“மஞ்சள் குளித்து முகம்மினுக்கி - இந்த
மாயப்பொடி வீசி கிற்கும் நிலை”

என்று கவிமணியவர்கள் சூரியகாந்தியைப் பற்றிக் குறிப்பிட் டிருப்பது, உண்மையில் சூரியனை மயக்குவதற்கன்று; வண்டுகளை மயக்கி வரவேற்பதற்கேயாம். இதனை அவரே மற்றொரு பாடலில் மலர்களின் வாயில் வைத்து,

“வண்டின் வரவெதிர் பார்த்து கிற்போம் - நல்ல
வாசனை வீசி நிற்போம்”

என்று கூறியிருப்பதனாலும் உணரலாம். மற்றும் பொழுது சாயும் மாலை வேளையில் மலரும் முல்லை முதலிய மலர்கள் பளிச்சிட்ட வெண்ணிறமாயிருப்பதன் காரணமும் வண்டுகளை மயக்கி வரவேற்கும் நோக்கமேயாம். இருட்டு நேரத்தில் வெண்ணிறந்தானே பளிச்சிட்டுத் தெரிந்து பார்ப்பவரைக் கவரும் இதனை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன்மணியம் என்னும் காவியத்திலுள்ள,

'... ... ... ... கிசியலர் மலர்க்கு
வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல்
எவ்வணம் அவற்றின் இட்ட நாயகராம்
ஈயினம் அறிந்துவந் தெய்திடும்? அங்ங்னம்
மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்?

என்னும் (மூன்றாம் அங்கம் - நான்காம் களம்) அடிகளால் அறியப் பெறலாம்.

இங்கே நுணுகி நோக்குவோர்க்கு ஓர் ஐயம் எழலாம். அதாவது, முல்லை மலர் ஒன்றில் தேன் அருந்தி மகரந்தப் பொடியும் ஒட்டிக்கொண்ட ஒரு வண்டு, அடுத்தாற்