பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மனத்தின் தோற்றம்



மேலும் அவள் மொழிகின்றாள்: “ஓகோ மதியமே! இப்போது புரிந்துகொண்டேன் நீ என்னை எரிப்பதற்கு என்ன காரணம் என்பதை! இதோ பார்! இது என்னுடைய கூந்தல். கறுத்துச் சுருண்டு வளைந்து நெளிந்து காணப்படுகின்றது. இதோ என்னுடைய பின்னல் சடை நீ இந்தச் சடையைப் பார்த்ததும் கிரகண காலத்தில் உன்னைப் பிடிக்கின்ற நாகப் பாம்பின் நடு உடல் என்றும், தலையைப் பார்த்ததும் பாம்பு படமெடுத்து நிற்கின்றது என்றும் எண்ணிக்கொண்டாய் போலும். உன் எதிரியாகிய பாம்பை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற காரணத்தால் என்னை எரிக்கின்றாயா? அல்லது, வசந்தவல்லியின் முகமதியை அந்தப் பாம்பு விழுங்கப் பார்க்கின்றது; ஆதலின் அந்தப் பாம்பை இப்போதே சுட்டெரித்து விடவேண்டும் என்றெண்ணி அந்தப் பாம்பைச் சுடுகின்றாயா? ஐயோ, ஒன்றும் புரியவில்லையே! இது பாம்பன்று பின்னல் சடை! இனிமேலாயினும் எரிப்பதை நிறுத்து இந்த மோகினி தன்னுடைய மோகன் வரவில்லையே என்று வருந்து கின்றாள். உனக்கு ஏன் இந்த வேகம் வெண்ணிலாவே!”

“மோகன் வரக் காணேன் என்றால்
வெண்ணிலாவே - இந்த
வேகம் உனக் கானதென்ன
வெண்ணிலாவே
நாகம் என்றே எண்ணவேண்டாம்
வெண்ணிலாவே - இது
வாகு குழல் பின்னல் கண்டாய்
வெண்ணிலாவே...”

‘அது இருக்கட்டும் - பேடியைப்போல ஒரு பெண்ணின் மேல் வந்து காய்கின்றாயே! இதுதானா சூரத்தனம்? வெட்கத்துடன் வீரமும் இருக்குமானால் அந்தச் சிவன்