பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 உன்னைப் போன்றவர்களுக்கு இந்த உலகம் அவ்வளவு எளிதில் பொருள் கொடுத்து விடுவதில்லையே, கமல்! - அப்படியிருக்கும் போது, கடைசியில் என்னால் உனக்கு என்ன மிஞ்சும் தெரியுமா? வேதனைதான் மிஞ்சும்! காதல் வெறியிலே நான் கடமையை மறக்கவா? அலுத்துப் போகும் அற்ப சுகத்திற்காகப் பெற்ற தாயையும் தந்தையையும் புழுவைப்போல் துடிக்க வைக்கவா? - சொல்லு கமல், சொல்லு? - இது உனக்குத் திருப்திதானா? இதற்காக உன் மீதுள்ள அன்பை நான் இழந்து விடத்தான் வேண்டுமா? அழியும் சடலத்தை விட்டு அழியாத ஆன்மாவை உன்னால் காதலிக்கவே முடியாதா? - சொல்லு கமல், சொல்லு? வாழ்வின் வளமே! தூசிவிழுந்த கண்ணைக் கசக்கும்போது எரிச்சல் இருந்தாலும் அதிலே ஒருவித சுகமும் இருக்கத்தானே செய்கிறது? - அந்த மாதிரி நிறைவேறாத நம் காதலில்தான் எவ்வளவு இன்பம்! கைக்குக் கிட்டாத பொருளின் மேல் இருக்கிற பிரேமை கிட்டும் பொருளின்மேல் எங்கே இருக்கிறது? என் உயிரே! காதலின் மயக்கத்தில் மூளை கலங்கும்போது, பழைய நினைவுகளின் இன்பம் நெஞ்சில் புகுந்து உறுத்தும்போது, மங்கிய நிலவிலே விளையாடியதெல்லாம் மனதிலே வந்து வட்டமிடும் போது, உணர்ச்சியின் மிகுதியால் அறிவை இழந்து விடக் கூடாது - ஏன் தெரியுமா? - வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களைச் சீர்தூக்கிப் பார்க்கவுமே நமக்கு ஆண்டவன் அறிவைக் கொடுத்திருக்கிறார். இன்பம் ஒன்றையே எதிர்நோக்கும் இளம் வயதிலே, அனுபவரேகை பதியாத ஆழமில்லா உள்ளத்திலே அன்று நாம் ஒருவரை ஒருவர் போட்டு அடைத்துக் கொண்டோம் - அப்போது திரும்பிப் பார்க்கவில்லை நாம்; சூழ்நிலையைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும் இல்லை நாம். இப்போது பார்த்தால் ஒரு பக்கம் இறந்த காலம் நம்மைப் பயமுறுத்துகிறது; இன்னொரு பக்கம் எதிர் காலம் நம்மைத் தாக்க ஓடி வருகிறது - இந்த