உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தக் கதையில் நீங்கள் சந்திக்கப் போகும் கதாப்ர்த்திரங்களைப் பற்றி...

ராமமூர்த்தி - விரிவுரையாளர்; தனி நபர் வழிபாட்டு முறையினால் முதலில் தடுமாறி, முடிவில் தன்னிலைக்கு வந்தவர். கல்யாணி - ராமமூர்த்தியின் மனைவி, தொட்டால் சுருங்கி விடாமல், தோள் கொடுக்கும் அளவுக்கு மனவலிமை பெற்றவள்; எந்த ஒரு காரியத்திலும் அவ்வளவு சீக்கிரமாக எந்த விதமான முடிவுக்கும் வந்து விடாதவள்.

விசாலம் - வேலைக்காரி; இல்லாமை தவிர வேறொரு பொல்லாமையும் இல்லாதவள்.

மாணிக்கம் - தோட்டக்காரன்; தன்னில் மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலுமே கடவுளைக் கண்டு களிப் பவன்; படித்தவர்களுக்கு இருப்பதாகச் சொல்லும் பகுத்தறிவு இல்லா விட்டாலும், படிக்காதவர்களுக்கு இயல்பாயுள்ள இயற்கையறிவு நிரம்பப் பெற்றவன்.

டாக்டர் நெடுமாறனார் - தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்; தன்னலம் பேணி இழிதகை புரிவதை அன்பென்னும் மாயையாலும், ‘தாய்த் திருநாடெனில் கையை விரிப்பதைப் பண்பென்னும் மாயையாலும் மறைத்து வாழ்பவர்; கல்வித் துறையில் மட்டுமல்ல, வாழ்க்கைத் துறையிலும் ராமமூர்த்தியைத் தமது அந்தரங்க மாணவராகக் கொண்டவர்; படித்ததெல்லாம் பணம் பண்ணு வதற்கே!’ என்பது இவருடைய தலையாய குறிக்கோள்; அதைக் கொண்டு தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டவசமாகத் தாம் பெற்ற பெருமையையும் புகழையும் எல்லா வகையிலும் நிலைநாட்டிக் கொள்வதில் நிகரற்றவர்.

கண்ணகி அம்மையார் - டாக்டர் நெடுமாறனாரின் அன்புக்கும் பண்புக்கும் உறைவிடமானவள்.

நறுமணம் - குற்றம் எதுவாயிருந்தாலும் அதைத் தானே ஏற்றுக்கொண்டு, அதற்காகப் பிறரைப் பழிவாங்கத் துணியாதவள். பலரைச் சோதனைக்குள்ளாக்கி, கடைசியில் தன்னையும் சோதனைக் குள்ளாக்கிக் கொண்டு விட்டவள்.

நம்பி - நறுமணத்தின் அண்ணன்; அன்பிலும் பண்பிலும் தனக்கிருந்த அசட்டு நம்பிக்கையின் காரணமாகத் தங்கையின் காதலுக்குத் துணையாயிருந்து, தன்னிலை இழந்தவன்.

இவர்களைத் தவிர இன்னும் சிலரும் உண்டு.