150 விந்தன்
அழாதே நறுமணம், அழாதே!'என்று அவர் என்னைத் தேற்றினார் - தேற்றிவிட்டுச் சொன்னார்.
‘தவறு என்னுடையது தான்; ஆற்றோடு போன அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் வந்து விட்டத் தவறு என்னுடையதுதான்! என்மேல் கொண்டு விட்ட மோக வெறிக்காகத் தன் கணவனையேக் கொன்றுவிட்ட அந்தப் பாவியைத் தாமிரபரணி ஆறுகூட ஏற்றுக் கொள்ளத் துணியவில்லை போலும்? போகட்டும், அவள் பாவம் அவளோடு போகட்டும்; என் பாவம் என்னோடு போகட்டும். எங்கள் இருவருடைய பாவமும் உன்னை, என் தெய்வமான உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது - ஆம், பாதிக்கவே கூடாது என்பதே என்னுடைய விருப்பம்...’
இதற்கு மேல் ஏதோ சொல்ல நினைத்த அவரை நான் இடைமறித்துச் சொன்னேன் :
‘'நானா உங்களுக்குத் தெய்வம், நீங்களல்லவா எனக்குத் தெய்வம்? சொல்லாதீர்கள்; இன்னொரு முறை அந்தமாதிரிச் சொல்லவே சொல்லாதீர்கள்.
அவர் சொன்னார் :
‘அவள் தான் உன்னை நான் மனைவியாக ஏற்றுக் கொள்ளத் தடையாயிருக்கிறாளென்றால், நீயுமா உன்னை நான் தெய்வமாக ஏற்றுக்கொள்ளத் தடையாயிருக்க வேண்டும்? இருங்கள்; யார் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் உனக்காக என்னால் அந்தத் தியாகத்தை மட்டும் செய்யாமல் இருக்கமுடியாது!”
‘என்னத் தியாகம் அது?'என்று நான் திடுக்கிட்டுக் கேட்டேன்.
‘இதுவரை யாரும் செய்யாத தியாகம் அது; தம்பி ராமமூர்த்திக்காக நான் உன்னைத் தியாகம் செய்யப் போகிறேன்!” என்றார் அவர்.