மனிதன் மாறவில்லை 67
இந்தச் சமயத்தில் யாரோ கனைக்கும் சத்தம் கேட்கவே மூவரும் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினார்கள். கையில் சீர்திருத்தவாதி என்ற பத்திரிக்கையுடன் கட்டிளங்காளை யொன்று வந்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும், “இதோ வருகிறதே, இன்னொரு வேடிக்கை!” என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள் தாழம்பூ.
அவ்வளவுதான்; ‘'அறைகிறேன் பார்!’ என்று பாய்ந்து வந்தது அந்தக் காளை.
அது ஓங்கிய கைக்குள் தாழம்பூ புகுந்து ஓடவே விழுந்தது காளை, எழுந்தது, சட்டையில் படிந்த மண்ணைத் தட்டுத் தட்டென்று தட்டி விட்டுக் கொண்டு!
‘வரும்போதே வெற்றி வாகை சூடிக்கொண்டு வருகிறாரே, அந்த வாகை சூடிய வீரர்தான்.அவளுடைய அத்தான்’ என்று அந்தக் காளையை நறுமணத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் கிழவன்.
‘வணக்கம்!’ என்று கை கூப்பிவிட்டு, அங்கிருந்த கயிற்றுக் கட்டிலின் மேல் உட்கார்ந்தது காளை.
‘வெற்றி இவருக்கல்ல; அவளுக்குத்தான்’ என்றாள் நறுமணம்.
‘என்ன இருந்தாலும் அவள் ஓடிவிட்டாளல்லவா?” என்றான் கிழவன்.
‘அவளைத் துரத்திப் பிடிக்க முடியாமல்தானே இவர் உட்கார்ந்துவிட்டார்!” என்றாள் நறுமணம்.
‘பெண்களின் மென்மை தெரிந்தவன் நான்; அவர்களிடம் வெற்றி அடைவதைவிடத் தோல்வி அடைவதையே நான் பெரிதும் விரும்புகிறேன் - ஏனெனில், அந்தத் தோல்வியில்தானே என்னைப்