வித்தன்
இல்லை; எனவே, எடுத்ததற்கெல்லாம் அவன் உணர்ச்சி
வசப்படுவதும் எனக்குப் பிடிக்கவில்லை.
தமிழ், தமிழ் என்று அவன் முழங்கட்டும்; தமிழன் தமிழன்’ என்று அவன் மார் தட்டட்டும்; தமிழ்நாடு, தமிழ்நாடு என்று அவன் தோள் கொட்டட்டும் அதற்காக நான் வருந்தவில்லை. ஆனால், எதைச் செய்தாலும் அதை வாணிப நோக்கத்தோடு செய்வதல்லவா இந்தக் காலத்து வாழ்க்கையில் வெற்றியடைய வழி? - அதை அவன் புரிந்து கொள்ளாமலிருந்ததுதான் எனக்கு வருத்தமாயிருந்தது.
இதை ஒரு நாள் அவனிடம் நான் மனம் விட்டு தெரிவித்த போது, ‘அதனாலென்ன, நறுமணம்? இன்று நான் இந்த உலகத்தில் வாழாவிட்டாலும், எல்லோருடைய உள்ளங்களிலும் என்றாவது ஒரு நாள் வாழ்வேன்!” என்றான் அவன், நம்பிக்கையுடன்.
பைத்தியக்காரன் - வேறென்ன சொல்வது, அவனைப் பற்றி - அதாவது, அவன் என்ன நினைக்கிறான் தெரியுமா? - ஏசு, புத்தர், காந்தி போன்றவர்கள் அன்று இந்த உலகத்தில் வாழாவிட்டாலும், இன்று எல்லோருடைய உள்ளங்களிலும் வாழ்வதாக நினைக்கிறான்:
இதை நீங்கள் நம்புகிறீர்களா? - இல்லை; இதை நான் நம்பவில்லை. பார்க்கப் போனால் அவர்கள் யாருடைய உள்ளங்களிலே வாழ்கிறார்கள்? - அவர்களைக் கொண்டு யாரால் பிழைக்க முடிகிறதோ, அவர்களைக் கொண்டு யாரால் இந்த உலகத்தை ஏமாற்ற முடிகிறதோ, அந்தப் புண்ணியாத்மாக்களின் உதடுகளிலேதான் அவர்கள் வாழ்கிறார்கள்.
இதற்கும் உதாரணம் வேண்டுமானால் வேறெங்கும் போகவேண்டியதில்லை; என்னுடைய வாழ்க்கையில் பங்கு கொண்ட அந்தப் பேராசிரியரை எடுத்துக் கொண்டாலே போதும்.