உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

69



ஏற்படுகின்ற பழக்கம் போல, கொஞ்ச நேரம் பேசிச்சிரித்து விட்டு பிரிந்து போகின்ற காரியமல்ல.

வாழ்கின்ற காலம் வரை, இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாது மகிழ்ச்சியாக வாழ்வதைத்தான் ‘இல்லறம்’ என்றனர். அதையே ‘நல்லறம்’ என்றதற்குக் காரணம். அந்த இல்லறம் மூலமாக பல நல்ல காரியங்கள் புரிவதற்குப் பயன்படுவதால்தான் என்று உலகநாதர் கூறினார்.

வாசு சாய்ந்து கொண்டிருந்தவன், இப்பொழுது நன்றாக உட்கார்ந்து கொண்டு கேள்வியைக் கேட்டான். கணவனும் மனைவியும் இணைந்தே எங்கு வாழ்கின்றார். அதற்குரிய சூழ்நிலைதான் குடும்பத்தில் அமைவதே இல்லையே?

குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை அமைவதெல்லாம் மனதால் தான் என்பதை, மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான். ‘மனம் போல் வாழ்வு’ என்றனர் நமது முன்னோர்கள். மனமே எல்லாவற்றிற்கும் காரணம்.

கடவுளை எதிர்த்து, தேவலோகத்தின் புரட்சி செய்தான் சாத்தான்.கடவுள் மேல் படையெடுத்தான். தாக்கினான். அவனைத் தண்டிக்க விரும்பிய கடவுள், மின்னல் படையை ஏவி அவனையும் அவனது படையையும் வீழ்த்தி நரகலோகத்தைப் படைத்து அதில் தள்ளி மூடிவிட்டார். விழுந்த மயக்கம் தெளிந்த சாத்தான், என்ன கூறினானாம் தெரியுமா?

“சொர்க்கமும் நரகமும் இடத்தால் அமைவது அல்ல சொர்க்கமும் நரகமும் மனதால்தான் அமைகிறது. மனதாலேயே இந்த நரக வாழ்வையும் சொர்க்கமாக்கி விடுவேன்” என்று கூறியதாக மேனாட்டுப் பெருங்கவிஞன் மில்ட்டன் தனது நூலில் கூறுகிறார்.