பக்கம்:மருதநில மங்கை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48புலவர் கா. கோவிந்தன்


பரத்தையர் மனை சென்று வாழும் கணவனுக்கு அறவுரை கூறுவதை விடுத்து அதற்கு மாறாக அவனை அவன் ஒழுக்கக் கேடுணர்ந்து வெறுக்கும் அவன் மனைவியின் மனைக்குச் சென்று, அவள் சினம் அடங்குமாறு அவனைப் புகழ்ந்து வாழ்ந்தான்.

இவ்வாறு, அவனை இடித்துக் கூறித் திருத்துவார் அனைவரும், அதைச் செய்யாது, அவன் ஒழுக்கக் கேட்டிற்கே உறுதுணை புரிபவராக மாறவே, அவன் அவ்வொழுக்கக் கேட்டில் ஆழ்ந்து போனான். அதனால், அவன் மனைவி பெரிதும் கலங்கினாள். நீலப்பட்டால் பண்ணிய மெத்தென்ற படுக்கை அதன் ஒருபால், அன்னத் தூவியால் ஆகிய மெல்லிய அணை. அதன் மீது படுத்தும் அவள் கண்கள் உறங்க மறுத்தன. கணவன் கைவிட்டனனே, அவன் அன்பைப் பெற்று அகம் மகிழ்தற்கு இல்லையே என்ற ஏக்கம் அவள் மனத்தை மிகவும் வருத்திற்று. அதனால் அவள் முகம் மலர்ச்சி இழந்தது. கணவனைப் பற்றிய கவலை சிறிதே மறக்குமாறு, கூண்டில் வளரும் கிளிகளுக்கு உணவூட்டும் பணியைத் தானே மேற்கொண்டாள். வெள்ளிக் கிண்ணத்தில் பாலேந்திச் சென்று அவற்றிற்கு ஊட்டினாள். உண்ண மறுக்கும் அவற்றிற்கு, உள்ளம் மகிழும் உரைபல கூறி உண்பித்தாள். அவை, அவள் இன்னுரை கேட்டுப் பால்உண்ண, அதுகண்டு அவள் முகம் சிறிதே மலர்ந்தது. கணவன் முகம் கண்டு, அவன் இன்பம் பெற்று மலராத அவள் முகம், கிளிகளின் இன்முகம் கண்டு மலர்ந்தது. ஆனால், அம் மலர்ச்சியும் நெடிது நிற்கவில்லை. சிறிது பொழுதே நின்றது. அம் மலர்ச்சி. கணவன் நினைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/50&oldid=1129479" இலிருந்து மீள்விக்கப்பட்டது